நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Wednesday, May 31, 2006

நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 207

ஆன்மீகம் எனது பார்வையில்...

இரவு கண்விழித்து தொலைக்காட்சி பார்த்து அதிகாலை 10 மணிக்கு :-) எழுந்து பெட்காபி குடித்து குளிக்க வேண்டுமே ... என்பதற்காக உடல் முழுதையும் நீரால் கொஞ்சம் நனைத்து காலை உணவை கடனே என்று உண்டும் உண்ணாமலும் , தன் உடலையும் உள்ளத்தையும் நோய்களின் சத்திரமாக கொண்டு, உழைத்த பணத்தையும் பொருளையும் மருத்துவர்களுக்கு கொடுத்துவிட்டு , சித்திரம் போன்ற நம் உடலை பேணாமல் அல்லலில் உழலும் விசித்திரப்பிறவிகள் பலர் வாழும் காலம் இது. இதில் இருந்து விடை பெற வேண்டாமா அன்பர்களே! தொடர்ந்து படியுங்கள்...

ஆன்மீகம் என்பது உடல் அழுக்கையும் மன அழுக்கையும் போக்கும் ஓர் அற்புதமான இலவச மருத்துவமனை என்றால் அது மிகையாகாது. ஆன்மீகத்தை பரப்பவே மதங்கள் தோன்றின. அன்பையே போதிக்கும் இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து மற்றும் அனைத்து மதங்களிலும் பொதிந்து கிடக்கும் ஆன்மீக மருத்துவமுறைகள் ஏராளம்! ஏராளம்!. ஆனால், இன்றைய சமுதாயம் ஆன்மீகம் என்ற பாதையில் இருந்து நாகரீகம் என்ற பெயரில் நரகமான வாழ்க்கைக்கு மாறிக் கொண்டு இருக்கிறது.

நம்மை நாமே நாகரீகம் என்ற பெயரில் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம். நாகரீகத்தால் நமக்கு கிடைத்த நன்மையைக் காட்டிலும் பல மடங்கு தீமைகள்தான் கிடைத்துள்ளது. நாம் ஏன் மாறிக்கொண்டு இருக்கிறோம் என்று சிந்திதால் ஏமாறிக்கொண்டு இருக்கிறோம் என்பது புரியவரும். உதாரணத்திற்காக நாகரிகத்தின் பயனும் பலனும் இங்கு பார்ப்போம்.

கண்டு பிடிப்பு
1. ஒளி (ளிக்க்ட்)
பயன்: இருளில் தெளிவாய்ப் பொருட்களைக் காண பயன் படுகிறது
தீமை: கண் சம்பந்தமான பிரச்ச்னைகள்(ஈன்சொம்னிஅ) லொச்ச் ஒf Dஇச்cரிமினடிவெ Pஒநெர்

2. சக்கரம் :
பயன் : போக்குவரத்து இதனாலே சாத்தியமாயிற்று
தீமை : காற்று மாசுபடுதல்.

3.செயற்கை ரசாயணங்கள்:
பயன்: விவசாயப் புரட்சி
தீமை : மனித வாழ்நாள் குறைந்து போனது, உணவில் விஷம், ஒவ்வாமை, மூச்சுக்குழல் பாதிப்புகள்

4. அதிர்வலைகள்(FM &ஆM)
பயன்: தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி
தீமை : நரம்பு பாதிப்பு, முதுகு தண்டு பாதிப்பு, ஊளைச்சதை

மேற்கண்ட ஒவ்வொன்றும் ஆராய்ச்சி கட்டுரையாய் வரவேண்டியவை. சின்னதாய் குறிப்பிட்டுள்ளேன். விரிந்து சிந்தனை செய்தால் அவை நமக்கு புரியும்.

"வரும் முன் காத்தலே நலம்"

"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே " என்கிறார் திருமூலர்.

இன்றைய காலத்தில் தோன்றும் நோய்களுக்கு குணப்படுத்த மருந்து கொடுக்கின்றனர். அன்றையப் பெரியோர்களோ நோய்களை தவிர்க்கவே ஆன்மீகம் வாயிலாக தியானம் , உடற்பயிற்சி போன்றவற்றை அளித்தனர். சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இவை விளங்கும்.

இஸ்லாமிய அன்பர்களின் இறைவழிபாட்டில் முக்கிய அம்சம் தினமும் 5 முறை தொழுதல், வருடத்தில் 1 மாதம் நோன்பிருத்தல். இந்த இரண்டு விசயங்களைக் கடைபிடித்தாலே போதும், மனதையும் உடலையும் ஆரோக்கியமாய் வைத்துக் கொள்ள முடியும். தொழுகை செய்கையில் பல்வேறு நிலைகளில் உடலை மாற்றுவர் அதன்மூலம் உடலின் தசைகள் மற்றும் நரம்புகள் நன்றாகச் செயல் படுகின்றது. அசைவ உணவையே பிரதானமாய் அவர்கள் உண்டாலும் நன்கு ஜீரணமாகி விடுகிறது. மேலும் உண்ணா நோன்பு மூலம் தங்கள் உடலில் உள்ள தேவைக்கதிகமான கொழுப்பினை கரைத்தும் விடுகின்றனர். இஸ்லாத்தில் இருந்து சில துளியைத்தான் இங்கு குறிப்பிட்டேன்.

கிறிஸ்துவம் கூட்டுப்பிரார்த்தனைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மனதினை ஒருமுகப்படுத்தவும் செம்மை படுத்துவும் , திடப்படுத்துவதும் மூலமாக ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம் என்பதை அவர்களது பிரார்த்தனைகள் விளக்குகின்றன.

கூட்டுப்பிரார்த்தனை மற்றும் பஜனை எனப்படும் இறைவன் புகழை ஆடிப்பாடி மகிழ்தல் மூலம் அளப்பரிய மனவலிமை கிடைக்கிறது. இதை இன்றைய உளவியலரும் ஒத்துக் கொள்கிறார்கள். அசனம் என்னும் சமபந்தி விருந்து சமுதாய பாகுபாடுகளை அகற்றி ஒற்றுமை உணர்வை உணர்த்துகிறது.

மிகத் தொன்மையான இந்துமதக் கொள்கைகளை எடுத்துக் கொண்டால் அதில் ஆயிரம் ஆயிரம் மருத்துவமுறைகள் காணப்படுகின்றன். ஆயுர் வேதம் ஆயுள் வேதம் என்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு கடவுளரும் ஒவ்வொரு மருத்துவராய் செயல்படுகின்றனர்.

உதாரணமாக ஞானக்கடவுள் விநாயகரை கருத்தில் கொண்டால் அவர் பெரும் பாலும் நீர்நிலைகளில் அரச மரமும் , வேம்பு மரமும் இணைந்த இடங்களில் வீற்று இருபார். இவ்விரண்டு மரங்களின் சேர்க்கை சுற்றுப்புரத்தில் உள்ள நச்சுக்க் கிருமிகளை நீக்கும் தனமை வாய்ந்தது. தோப்புக்கரணம் போடும் போது நமது உடலின் ஆதாரமாக விளங்கும் மூலாதாரச் சக்கரம் உற்பத்தி செய்யும் மின்காந்த அலைகள் சுவாதிஷ்டாணாம், அனாஷகதம், மணிபுராகம், விசுத்தி, ஆக்ஞா சகஸ்ராரம் என்ற சக்கரங்களின் மூலமாக சிரசை அடைகிறது. பின்னர் தலையய குட்டிக் கொள்வதன் மூலம் உடல் முழுதும் பரவுகிறது. மூளை செல்கள் புதுப்பிக்கப் படுகின்றது. ஞானம் , புத்திசாலித்தனம் பெருகுகிறது( சிலர் ஏதேனும் யோசனை செய்கையில் தலையை சொறிவதை காண்போம். அதன் பின் விளக்கம் இப்படித்தான்)

குழ்ந்தைப்பேரு அற்றவர்கள் பழனி சென்று முருகனை தரிசித்தால் பாக்கியம் அடைவர்கள் என்றார்கள். காரணம் பதையாத்திரை சென்று கந்தனை காண்கையில் வழியில் உள்ள கற்கள் பாதங்களில் படுவதன் மூலம் அக்குபஞ்சர் சிகிச்சைபோல் குணம் கிடைக்கிறது. கர்ப்பப்பை தசைகள் சுருங்கி விரிந்து வலுவடைகிறது. சுத்தமான காற்றால் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைகிறது. கர்ப்பபை மலங்கள் வியர்வையினால் வெளியேறி விடுகின்றன. குழந்தைப் பேறும் வாய்க்கிறது.

பழங்கால கோயிலகள் வாஸ்துவை அடிப்படையாய்க் கொண்டு கட்டப்பட்டவை. மேலும் சமஸ்கிருத , தமிழ் மந்திரங்கள் , அபிஷேகங்கள், கற்பூர ஆராதனைகள் இவற்றினால் கோயில் கொடி மரங்களின் அமைப்பினால் ஒரு நேர்மறையான சக்தி கோயிலில் நிரம்பிக் காணப்படும். ஆகையால்தான் நாம் ஆலயம் சென்றால் நம் ஆ(ன்மா) லயமாகிறது. இன்னும் விரிவாக எழுதிக் கொண்டே செல்லலாம். இருப்பினும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பதற்கேற்ப இத்துடன் நிறைவு செய்கிறேன்.

அனைத்து மதங்களும் போதிக்கும் சில முக்கிய கடமைகள்
1. அதிகாலை எழல்
2. குளிர்நீரில் குளித்தல்
3. தினசரி வழிபாடு மற்றும் தியானம்
4. பஜனை பாடுதல்
5. உபவாசம்(விரதம்)
6. மந்திர உச்சாடனை செய்தல்
7. பாத யாத்திரை

ஆகவே மதங்கள் எனப்படுவது மனிதனை நல்வழிப்படுத்தவே உருவானது. அதை சிலர் தவறாய் பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கது.

அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கிறது.

எம்மதமும் நல் மதமே! அனைத்தும் சம்மதமே!

ஆன்மீகம் நம் உடலையும் உள்ளத்தையும் கட்டிக்காக்கவே பயன்படுகிறது.

ஆன்மீகம் அறிவோம்! அன்பாய் வாழ்வோம்!

நன்றி!

இன்றே கடைசி

இணையத்தின் இனிய நண்பர்களே!

வணக்கம்!

அன்பர் பலரின் வேண்டுகோளுக்கிணங்கி படைப்பை அனுப்புவதற்கான கடைசி தேதி மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

உங்கள் அன்பினால் பிறந்த இந்த "கூகுள் நம்பிக்கை குழுமம்" தனது முதலாம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31 மே ௨006.
படைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன!

விரைந்து உங்கள் படைப்புக்களை அனுப்புங்கள். உங்களது முகவரியையும் , உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் தாருங்கள்!

ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களை அனுப்பலாம்!

உங்கள் பெயரை எடுத்தபின்னரே நடுவர் குழுவிற்கு படைப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே உண்மையான விமர்சனத்தை நீங்கள் பெற முடியும். முடிவுகள் வெளியாகும் போது அனைவரது பெயரும் வெளியிடப்படும்.

Tuesday, May 30, 2006

நம்பிக்கை போட்டிக்கான கதை 107

இயற்கை மருந்து

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்)

குறிப்பு: துயரங்களின் உயரங்களைத் தொட்டு, சோகங்களின் எல்லை வரைச் சென்று, இனி வாழ வழியே இல்லையென்று, தற்கொலைக்கே தயாராகிவிட்ட ஓர் இளைஞன், அதிலிருந்து மீண்டு, புனர்ஜென்மம் எடுத்து, புதுவாழ்வு கண்டு, சமுதாயம் போற்றும் ஒரு சாதனையாளன் ஆகிறான். எப்படி மாறினான் ? மாற்றியது எது? இது தான் கதை, கவிதை நடையில், கதாநாயகனின் வாக்குமூலமாய் வருகிறது.


இலக்கு இல்லாத பயணமாய் நடக்கிறேன்.
இறுகிய இதயத்துடன்.
வாழ்க்கையில் வெறுப்பு
காதலில் தோல்வி
வாட்டிடும் வறுமை
முயற்சியில் வீழ்ச்சி!

சிந்தை மோனத்தில், பார்வை வானத்தில்
தந்தையும், தாயும், தமக்கையும் சேர்ந்து
தந்தனர் பட்டம், படிப்பு முடிக்காமலேயே!

தண்டச்சோறு தான் அவர்கள் தந்த பட்டம்,
இதயம் வலிக்கிறது
ஆண்மை துடிக்கிறது தன் மானத்தால்
கனத்த மனத்தினனாய் நான்.

சோகம் என்னை செக்குமாடாய் சுற்றிவர
கால்கள் மட்டும் நடக்கின்றன.
சோகம் கூடிவிட்டால் வேகமும் கூடிவிடுமோ?
ஏனிந்த அவசரம், எங்கு செல்ல இந்த பரபரப்பு?
பாவம்,கால்கள் அறியாது,ஆனால் பதட்டம், பயம், கேள்வி
எல்லாம் கலந்த உணர்வு கலவையாய்
குழப்பம் என்னும் எரிமலை குழம்பு
உருவாகி, என் உள்ளத்தில் கொந்தளிக்க,
ஆற்றாமையால் உருவான ஒரு பெரும்மூச்சு
புயல் காற்றாய் என் நாசிக்கரையை கடக்கிறது,
காற்றில் கலக்கிறது.

ஊன்றுகோல் ஒன்றிருந்தால் நான் எழுந்து நடந்து விடுவேன்
பற்றுக்கோல் இல்லாத பசுங்கொடியாய் அல்லவா நான் பரிதவிக்கின்றேன்
பரிதாபம் என் நிலை, ஊறு செய்ய காத்திருக்கும் உறவினர்கள்
உதவி செய்ய ஊரினிலே யாரும் இல்லை.
என்னை உதவாக்கரை என்று உதாசினம் செய்தார்கள்,
உதவி என்றவுடன் ஒதுங்கியே சென்றார்கள்.
நானும் தான் என் வயதுக்குள் எத்தனை துன்பங்கள்?
எத்தனை துயரங்கள்? எத்தனை சோகம்? எத்தனை வறுமை?
எத்தனை எத்தனை அவமானங்களை எல்லாம் கூட சந்தித்துவிட்டேன்,
சகித்துக் கொண்டேன்.

ஆனால், இனியும் பொறுத்துக் கொள்ள என் இதயத்தில் வலுவில்லை
இன்று என் பிரபஞ்சமே பிரளயத்தால் அழிந்து விட்டது போன்ற ஒரு பிரம்மை
நான் மட்டும் தனிமையாய், ஒருமையாய், வெறுமையாய், நிராதரவாய், நிர்கதியாய் நிற்கின்றேன்.
அதனால் தான் நான் இந்த தகாத முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கின்றேன்.

இப்போது நான் எங்கு செல்கிறேன் தெரியுமா? ஹீம் ....
வேறு எங்கே செல்லப் போகிறேன்
வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களும்
தொல்லைகளிலிருந்து விடுபட விளைபவர்களும்
எங்கு செல்வார்களோ?
எங்கு சென்றால் என்னை உதவாக்கரை, தண்டச்சோறு என்று சொல்ல மாட்டார்களோ?
எங்கு சென்றால் திரும்பமுடியாதோ?
எங்கு சென்றால் உடல்பாரத்தைக் கூட உதறிவிட்டு
காற்றோடு காற்றாக கலந்து விடலாமோ?
அங்கு தான்!
அதே அந்த தற்கொலைத் தளத்திற்கு தான், இவ்வளவு அவசரமாக செல்கிறேன்.

ஆனால், யாரோ என்னை தொடர்வது போல் இருக்கவே நின்று விட்டேன்
சுற்றுமுற்றும் பார்க்கிறேன், யாருமே இல்லை
வானத்தை அண்ணாந்து பார்த்தேன் அங்கு ஒரு கார்மேகம் என்னையே உற்றுப்பார்க்கிறது
ஏதோ சொல்லத் துடிக்கிறது. ஹீம் ...
காற்றடித்தால் கரைந்து போகும் கார்மேகத்தால்
எனக்கு என்ன உதவி செய்து விட முடியுமாம்?
ஏன் என்னை தொடர்கிறதாம்?
என் வறுமையை போக்கவா?
என் சோகத்தை தீர்க்கவா? இல்லை
என் திறமைகளை வெளி உலகுக்கு உணர்த்தி
என் வாழ்வை ஒளிரச் செய்யவா?
என்னை மிளிரச் செய்யவா? அது முடியாது,
முடிந்து விட்டது என் வாழ்க்கை,
அஸ்தமித்த வாழ்க்கை எப்படி மிளிரும்? எப்படி ஒளிரும்?.

இப்போது என் உள்ளத்தில் அலை அலையாய் பல கேள்விகள் எழுகின்றன,
அஸ்தமித்த ஆதவன் மீண்டும் உதிப்பது இல்லையா?,
கரை வரை வந்த அந்த அலைகள் கூட,
கரையிலேயே கரைந்து விடுவதுமில்லை உறைந்துவிடுவதுமில்லை
மீண்டும் கடலில் சங்கமித்தே தீரும்.

இந்த தீர்மானத்தோடு மீண்டும் நான் மேகத்தை ஏறிட்டுப் பார்க்கிறேன்
அது இன்னும் பல உண்மைகளை உள்ளன்போடு எனக்கு உணர்த்தியது
மகனே! நீ மாய்ந்து விட்டால் ஓய்ந்து விடும் பிரச்சனைகள் என்று தவறாக எண்ணி விட்டாய்.
அதனால் தான் இந்த தகாத முடிவுக்கு நீ தள்ளப்பட்டிருக்கிறாய்
மரணமென்பதும் அழிவு என்பதும் உடலுக்குத் தான். ஆன்மா அழிவதில்லை
ஆன்மா என்பது உடலை இயக்குகின்ற ஆற்றல்
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாதென்று
அறிவியலாரே ஒப்புக் கொள்கின்றனர்
எனவே தற்கொலை என்பது கூட ஒரு தற்காலிகமான நிவாரணம் தானே ஒழிய நிரந்தரம் இல்லை.

அடித்துக் கொண்டு வரும் ஆற்று வெள்ளத்தில் சிறிய மீன்குஞ்சுகள் கூட எதிர் நீச்சல் போடுகின்றன
சிறிய பறவைகள் தான் அந்த சிட்டுக்குருவிகள் அவை புயல்காற்றையும் கூட கிழித்து பறக்கின்றன.

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும்
புழுவிடம் கூட உள்ளது போர்க்குணம்.
போர்க்குணம் என்பது ஆயுதம் ஏந்துவது அல்ல, தீவிரவாதி ஆவதும் அல்ல
வாழ்க்கையில் வறுமையை, துன்பத்தை, துயரத்தை
நமக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை எல்லாவற்றையும்
எதிர்த்து போராடுவது தான்.

எத்தனை முறை அறுந்து அறுந்து விழுந்த போதும்
தளராத மன உறுதியோடு தனக்கென வீடு ஒன்றை
தானே கட்டி முடிக்கிறது அந்த சிலந்தி
இந்த மாதிரி பூச்சி புழுக்களிடமெல்லாம் வீரமும், விடா முயற்சியும்,
போர்க்குணமும் இருக்கும் போது
உன்னிடம் இல்லை என்பது தான் வேதனை.

மகனே! நீ தற்கொலை செய்து கொண்டால்
உன் உடலை புதைக்க மாட்டார்களய்யா,
எரித்து விடுவார்கள், எரித்து சாம்பலாக்கி விடுவார்கள் பாவிகள்,
ஏன் தெரியுமா? இப்படி ஒரு கோழையை பிள்ளையாக பெற்றேனே
என்று அந்த பூமித்தாயின் மனம் புண்படுமாம்,
இந்த கோழையில் உடலைக்கூட ஏற்க்க மாட்டேன் என்று சொல்லி விடுவாளாம்,
எனவே கவலைகளை காற்றாய் நினைத்து கிழித்து பறந்து விடு
மீன்குஞ்சிடம் பாடம் கற்றாய் அல்லவா? வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடு
அமிழ்ந்து போகாதே.

நன்றாக என்னைப் பார் மகனே!
நான் பூமியில் நீராக இருந்தேன்,
சூரியனின் சூழ்ச்சியாலே மாய்ந்தேன்,
ஆவியானேன், அலைந்தேன், மேகமானேன்,
இதோ தென்றல் என்னை தீண்டி விட்டது
மீண்டும் மாரியாய் நான் மாறி மண்ணில் வந்து
நீராய் ஜனிக்க இருக்கிறேன்.

மானிடனும் அப்படித் தான் நிம்மதியாய் வாழ்வான்
நிமிடத்தில் மாய்வான்.
விதியின் பயனாலே மீண்டும் மண்ணில் பிறந்து விடுவான்
எனவே வாழ்க்கையை எதிர்த்து போராடு, போரிடு, வாழ்ந்து காட்டு,
வா மகனே! வந்து விடு.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
செய்து முடி, அல்லது செய்து கொண்டே செத்து மடி
வாழ்ந்து காட்டு, வா மகனே! வந்து விடு

இப்படியாக பேசி முடித்தது மேகம்
வெட்கத்தால் கூசி துடித்தது என் தேகம்.
மேகம் தன் முதல் துளி முத்தத்தை என் உச்சியில் பதித்தாள்
சிலிரென்றது, சிலிர்த்தேன்
இதோ என் நெற்றியில்
ஆகா! என் கன்னத்தில்
என்ன ஒரு இன்பம். என் உடலெல்லாம் முத்தமழை முத்துகளை சிந்தி
என்னை குளிரச் செய்து விட்டாள்,
மழையில் நனைந்தது உடை மட்டுமல்ல
உடல் மட்டுமல்ல, இது வரை உள்ளத்தில்
கொந்தளித்துக் கொண்டிருந்த எரிமலைக்குழம்பும்
குளிர்ந்து உறைந்து இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது,
என் மனமாற்றத்தை உணர்ந்து விட்டவள் போல்
பளிச்சென கண் சிமிட்டி உலகம் அதிரும் வண்ணம் கலகலவென சிரித்தாள்
வானத்தை அண்ணாந்து பார்த்தேன்
அங்கே மேகத்தை காணவில்லை
என் சோகத்தையும் தான்.

வானம் மட்டும் தெளிந்த நீரோடையாய் தெளிந்து கிடக்கிறது
என் உள்ளத்தை போல்
இந்த உலகமே புதியதாக, பூந்தோட்டமாக, அழகாக,
என்னை பார்த்து பாசத்தோடு சிரிப்பது போல் இருந்தது
நானும் புதிய மனிதனாய் புனர்ஜென்மம் எடுத்தேன்
எனக்குள் ஒரு நம்பிக்கை தீப்பொறி,
எனக்குள் ஒரு போர்குணம், தன்னம்பிக்கை,
எல்லாம் வந்துவிட்டதை உணர்ந்தேன்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் செய்து முடி, அல்லது செய்து கொண்டே செத்து மடி,
வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும்
என்ற உற்சாக மந்திரங்களை எனக்கு நானே உச்சரித்து கொண்டு
வீடு திரும்பினேன்.

உள்ளத்தையும் கூட பண்படுத்தும் பண்புள்ள
உயர்ந்த மருந்து இயற்கை மருந்து தானே!!!?

நம்பிக்கை கவிதை போட்டி 306

பெண் என்பவள் நமது தெய்வமே!

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்த படைப்பு இது)

படைப்பாளி பெயர் : திருப்பூர். தியாகு



பெண் என்றால் பேயும்
இரங்கும் என்றார்கள் -ஆமாம்
இனம் இனத்தோடு
சேரும் என நினைத்தேன்!

பெண்என்றால் மாயை
என்றார்கள் -ஆமாம்
புரியாதது எல்லாம்
மாயை தானே என்றேன்!

எனது கருத்துக்கள்
இவ்வாறு இருக்க
அன்னை காளி
கனவில் வந்தாள்
அவனியில் எனக்கோர்
ஆக்கம் தந்தாள்!

அத்தனை பெண்ணிலும்
உள்ளவள் நானே
அக்காவாய் தங்கையாய்
அமைந்த பெண்கள்
அனைத்தும் நானே

என்னை வணங்க
நினைத்தால் முதலில்
பெண்ணை வணங்கு
போதும் என்றால்!

பெண்ணவள் கண்ணீர்
பெற்றவன் உலகில்
பெற்றவை அனைத்தும்
இழப்பானென்றால்!

Monday, May 29, 2006

இன்னும் 3 நாட்கள் மட்டுமே ???

இணையத்தின் இனிய நண்பர்களே!வணக்கம்!

அன்பர் பலரின் வேண்டுகோளுக்கிணங்கி படைப்பை அனுப்புவதற்கான கடைசி தேதி மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

உங்கள் அன்பினால் பிறந்த இந்த "கூகுள் நம்பிக்கை குழுமம்" தனது முதலாம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31 மே ௨006 இன்னும் 3 நாட்களே உள்ளன!
படைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன!

விரைந்து உங்கள் படைப்புக்களை அனுப்புங்கள். உங்களது முகவரியையும் , உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் தாருங்கள்!

ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களை அனுப்பலாம்!

உங்கள் பெயரை எடுத்தபின்னரே நடுவர் குழுவிற்கு படைப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே உண்மையான விமர்சனத்தை நீங்கள் பெற முடியும். முடிவுகள் வெளியாகும் போது அனைவரது பெயரும் வெளியிடப்படும்.

Saturday, May 27, 2006

நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 206

இலக்கியமும் ஆன்மீகம்

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்த படைப்பு)

படைப்பாளி பெயர்: புலவர். கா. பரமார்த்தலிங்கம் எம். ஏ.பி.எட்.,டி.எ.,

இலக்கியம் - இலக்கு + இயம் . குறிக்கோளைப் பற்றி இயம்புவது. இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி. மக்களின் வாழ்க்கை முறைகளைத் தெள்ளத் தெளிவாக விளக்குவது; நம்மை அன்பு நெறிப்படுத்தி அருள் நீரில் திளைப்பதற்கு அழைத்துச் செல்வது. இத்தகு சிறப்பு வாய்ந்த இலக்கியமானது நம்மை ஆன்மீக நெறியில் அழைத்துச் செல்லும் உன்னத கருவியாகும் என்று கூறினால் அது மிகையாகாது.




இலக்கியங்களில் ஆன்மீகக் கருத்துக்கள் ஏராளமாகப் பொதிந்து கிடக்கின்றது. சான்று பல காட்ட போதுமான இடம் காணாமையால் ஒரு சில சான்றுகளை மட்டும் இங்கு கண்ணுறுவோம்.


கதிரவன், பறவைகள், மரங்கள் மற்றும் பஞ்சபூதங்கள் யாவும் இறைவனைத் தொழும் போது , ஆறறிவு படைத்த மனிதனே! உன் நெஞ்சம் மட்டும் இறைவனைத் தொழாமல் இருக்கிறதே என்று கேட்கிறார் வேதநாயகம் பிள்ளை.


"கதிரவன் கிரணக் கையாற்

கடவுளைத் தொழுவான், புட்கள்

சுதியோடு மாடிப் பாடித்

துதி செயும் தருக்க ளெல்லாம்

பொதியலர் தூவிப் போற்றும்

பூதந்தந் தொழில் செய் தேத்தும்

அதிர்கட லொலியால் வாழ்த்தும்

அகமே நீ வாழ்த்தா தென்ன! "

என்ற பாடலை ஆழ்ந்து படித்தால் நாத்திகன் கூட ஆத்திகன் ஆகி விடுவான்.



"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் " என்பது முதுமொழி. இத்தகு சிறப்பு வாய்ந்த திருவாசகத் தேனைத் தந்தருளிய மாணிக்க வாசகப் பெருமான் " ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெரும் ஜோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதோ? வளருதியோ? வன் செவியோ? நின் செவிதான்! " என்ற திருவெம்பாவைப் பாடல் இறைவனின் திருநாமத்தை கேட்காத செவியை "வன் செவி" என்று சாடுகிறார். செவியைப் போன்றே நம்முடைய வாய், கண், கை போன்ற உறுப்புகள் இறைவனின் திருநாமத்தைப் பாடவும் , திருவுருவத்தைக் காணவும் , திருவுருவத்தை வணங்கவும் பயன்பட வேண்டும் என்ற கருத்தை இலைமறைக்காயாக நமக்கு விளக்குகிறார் மணி வாசகப் பெருமான்.


பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடும் கவி வலவராம் சேக்கிழார் பெருமானின் "பெரிய புராணம்" ஓர் ஆன்மீகச் சுரங்கம். வெட்ட வெட்டக் குறையாத ஆன்மீகக் கருத்துக்கள் அதில் ஏராளம்! ஏராளம்! தெய்வத்தை குழுந்தையாகப் பாவித்து பத்து பருவங்களில் புகழ்ந்து பாடும் இலக்கியம் "பிள்ளைத் தமிழ்" எனப்படும். குமரகுருபரின் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழையும் , பகழிக் கூத்தரின் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழையும் ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையாவது படித்தறிய வேண்டும்.

'ஐம்புலன்களை அடக்கினால் நம்முள் அறிவாய் விளங்கும் இறைவனை அடையலாம்' என்ற கருத்தை இதிகாசங்களாகிய மகாபாரதமும், இராமாயணமும் நமக்கு வலியுறுத்துகிறது. சீதாதேவியைத் தேடி இலங்கை சென்ற அனுமன், அசோகவனத்தை அழித்தபோது இராவணனின் ஐந்து சேனாதிபதிகள் வந்து சண்டையிட்டனர். அவர்களை அனுமன் வெல்லும் காட்சியை கம்பன் வர்ணிக்கும் போது 'ஐம்புலன்கள் போல ஐவர்; அறிவு போல அனுமன்; அறிவு புலன் இன்பங்களை வெல்வதுபோல அனுமன் அவர்களை வென்றான்' என்பதை

" அஞ்செனும் புலன்கள் ஒத்தார் அனுமனும் அறிவை ஒத்தார்" என்கிறார். இன்னும் எண்ணற்ற ஆன்மீக விளக்கங்களை கம்பராமாயணத்தில் நாம் பெற முடியும்.

தனிமனித வாழ்க்கைக்கும் சமுதாயத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத் திற்கும் இன்றியமையாத கடமை தர்மம் எனப்படும். தர்மம் என்ன என்பதை மகாபாரதத்தின் பல்வேறு இடங்களில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், ஈரடியால் உலகை அளந்த தெய்வப் புலவர் பற்றற்ற இறைவனைப் பற்ற , பற்றை விடுக என்று எவ்வளவு அழகாகக் குறிப்பிடுகிறார்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு"

-என்ற ஒரு குறட்பாவிலேயே ஆன்மீகத்தின் முழுமைக் கருத்தும் அடங்கியுள்ளது. கற்புடை பெண்டிரை தெய்வமாகப் போற்ற வேண்டும் என்ற உயரிய கருத்தினை இளங்கோ தாம் யாத்த சிலம்பில், கவுந்தியடிகள் வாயிலாக கண்ணகியின் பெருமையை விளக்குகிறார், இதோ அந்த அடிகள்..

"இவளோ

கொங்கச் செல்வி, குடமலை யாட்டி

தென்றமிழ்ப் பாவை, செய்தவக் கொழுந்து

ஒரு மாமணியாய், உலகில் தோன்றிய திருமாமணி"

கடவுள் அகக் காட்சியில் காணத்தக்கவர். ஆணவம், கண்மம், மாயை ஆகிய மும்மலங்கள் சூழ்ந்த மனதினல் இறைவனைக் காண இயலாது. எனவே மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உயரிய கருத்துக்களை உள்ளடக்கிய இலக்கியங்களால் ஆன்மீகம் தழைத்தோங்குகிறது; ஆன்மீகத்தால் இலக்கியங்களும் தழைத்தோங்குகிறது. இலக்கியங்கள் யாவும் ஆன்மீக வாழ்விற்கான கருத்துக்களை செவ்வனே வலியுறுத்தி வந்துள்ளன. ஆகவே! மெய்யன்பர்களே இலக்கியவழி நின்று ஆன்மீகத்தில் திளைத்து , நற்கதி பெறுவோமாக!

நன்றி! வளமுடன் வாழ்க!

நம்பிக்கை போட்டிக்கான கதை - 109

உலகின் புதிய கடவுள்

சுந்து சாமியாராகி விடும் முடிவில் இருந்தான்.இதற்கும் அவனுக்கு அப்போது தான் சூப்பர்வைசராக பதவி உயர்வு கிடைத்திருந்தது.சுந்துவுக்கு தொழிலாளிகளை மேற்பார்வை இட்டு போரடித்து போயிருந்தது.வீட்டில் சம்சாரத்தோடும் சண்டை.அதனால் சாமியாராகிவிடலாம் என்று யோசித்துக்கொண்டே போனான்.

வழியில் பஸ்ஸ்டாண்டில் ஒரு இளைஞன் சுந்துவின் ஆபிஸ் வரவேற்பாளர் புனிதவதியை ஏக்கத்துடன் பார்த்தபடி நின்றிருந்தான்.அவனை பார்த்ததும் சுந்துவுக்கு ஏதோ பொறி தட்டியது.சுந்து அவனை வித்யாசமாக உற்றுப்பார்ப்பதை அறிந்த அந்த இளைஞன் சுந்துவுக்கு விஷயம் புரிந்துவிட்டது என்பதை அறிந்தான்.ஓடத்துவங்கினான்.

"நில்.நில்.." என கத்திக்கொண்டு சுந்து அவன் பின்னால் ஓடினான்.அவனை பிடித்துவிட்டான்.

"யார் நீ" என கேட்டான் சுந்து.ஆந்தை போல் விழித்தான் இளைஞன்.

"இங்கே என்ன செய்கிறாய்" என கேட்டான் சுந்து.அவனால் பிரமிப்பை அடக்கவே முடியவில்லை.ஆன்மிகத்தில் ஊறி திளைத்த சுந்துவுக்கு அந்த இளைஞனை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமமே ஏற்படவில்லை.

அந்த இளைஞன் தான் கடவுள்.

சர்வவல்லமை படைத்த கடவுள் புனிதவதியிடம் ஜொள் விட்டுக்கொண்டு நிற்பதை கண்டால் சுந்து அதிர்ச்சி அடைவானா மாட்டானா?

"பசிக்குதுப்பா சுந்து.ஒரு டீ வாங்கித்தரப்படாதா" என கேட்டார் கடவுள்.

இருவரும் டீகடைக்கு போனார்கள்.டீ குடித்தார்கள்.

"உங்கள் பெயர் என்ன?" என்று தயங்கி தயங்கி கேட்டான் சுந்து.

"விருமாண்டி" என்றார் கடவுள்.

"தெற்கத்தி பெயராக இருக்கிறதே" என தயங்கினான் சுந்து.

"ஆமாம்பா சுந்து.நான் தெற்கத்திக்காரன் தான்.சொந்த ஊர் மதுரை" என்றார் கடவுள்.

"இங்கே எதற்கு வந்தீர்கள்?" என கேட்டான் சுந்து."புனிதா.."என இழுத்தான்.

"அது ஒரு பெரியகதை" என்று பெருமூச்சு விட்டார் கடவுள்."நான் பிறந்தது மதுரை,ஒரு ஆச்சாரமான குடும்பத்தில்.உன்போலவே நானும் பயங்கர கடவுள் நம்பிக்கை கொண்டவன்.கல்யாணம் செய்துகொள்ளாமல் கடவுளுக்காகவே என்ன் வாழ்வை அர்ப்பணித்தேன்.அப்போது என் கண்முன் கடவுள் தோன்றினார்.அவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக சொன்னார்.வேண்டுமானால் என்னை அந்த பதவியை ஏற்கச்சொன்னார்.நான் ஏற்றேன்.ஒரே வருடம்.ராஜினாமா செய்துவிட்டேன்..."என பெருமூச்செறிந்தார் கடவுள்.

"என்ன சொல்கிறீர்கள்?அப்போது கடவுள் என்பது ஒரு ஆள் கிடையாதா?ஒரு பதவியா?"என குழப்பத்துடன் கேட்டான் சுந்து.

"ஆமாம்பா சுந்து.இப்ப நீ விரும்பினால் கூட கடவுளாகலாம்.அந்த பதவி காலியாகத்தானிருக்கிறது" என்றார் கடவுள்.

"எனக்கு கடவுளாக வேண்டும்.என்ன செய்வது?" என கேட்டான் சுந்து.

*******

கண்விழித்தான் சுந்து. பகீறென்ராகிவிட்டது அவனுக்கு.

அண்டவெளியில் மிதந்துகொண்டிருந்தான் அவன்.

"பூமி உருவாகட்டும்" என்றான் சுந்து

பூமி உருவானது.சுந்து அதில் இறங்கினான்.மேலே பார்த்தான்.ஒன்றுமே இல்லை.

"சூரியன்,நட்சத்திரம்,நிலா உருவாகட்டும்" என்றான் சுந்து

மூவரும் உருவானார்கள்.

"மரம்,செடி,கொடி உருவாகட்டும்" என்றான் சுந்து.

மரம்,செடி,கொடிகள் உருவானது

சுந்துவுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது.தான் கடவுளாகிவிட்டதை அவன் அறிந்தான்.மிக நல்ல உலகை படைத்து காட்டுவது என முடிவு செய்தான் சுந்து.

"ஆணும் பெண்ணும் உருவாகட்டும்" என்றான் சுந்து.

இரு எறும்புகள் உருவாயின.

குழம்பினான் சுந்து."என்ன இது?" என உரக்க கேட்டான்.

"கடவுள் முன் மனிதன் எறும்பு போல்தான்.நீ கடவுள் என்பதால் அவர்கள் இருவரும் உனக்கு எறும்பு போல் அற்பமாக தெரிகிறார்கள்.உண்மையில் அவர்கள் மனிதர்களே" என அசரீரி ஒலித்தது.

ஆணையும் பெண்ணையும் சுந்து உற்றுப்பார்த்தான்.'சென்று மானுட இனத்தை பெருக்குங்கள்" என்றான் சுந்து.அவர்கள் விரைந்தோடினார்கள்.

******

சுந்துவுக்கு போரடித்தது.எப்படி பொழுதுபோக்குவதென்றே தெரியவில்லை.பசி இல்லாததால் எதையும் படைத்து உண்ண முடியவில்லை.டீவி பார்க்கலாமென்றால் அதில் வெறும் எறும்புகளாகவே நிகழ்ச்சிகள் வந்தன.அவனுக்கு சமாமானவர்கள் யாரியும் அவனால் படைக்க முடியாதென்பதால் பேச்சுதுணைக்கு கூட ஆள் இல்லை.

எறும்பு உலகில் ஓயாத சண்டையாக இரூந்தது.இவன் போனால் அவை சண்டையை நிறுத்தின.

"மூவரும் நீயே,முதல்வரும் நீயே,ஆதியும் நீயே,அந்தமும் நீயே"என கவிதை பாடத்துவங்கின.

முதலில் கேட்பதற்கு நன்றாகத்தானிருந்தது,பிறகு சுந்துவுக்கு போரடித்து விட்டது.முகத்துக்கு நேரே புகழ்ச்சியை எத்தனை நேரம் கேட்பது?

சுந்து எழுந்துபோனான்.சுந்து போனதும் எறும்பு உலகில் சண்டை மீண்டும் துவங்கியது.

"சனியன்களா"என சுந்துவுக்கு கோபம் வந்தது.எறும்புகூட்டத்தின் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி அழித்தான்.

"அடடா என்ன செய்துவிட்டோம்?" என அதன்பின் தோன்றியது.

மரத்தடியில் அமர்ந்து யோசித்தான்.

கடவுள் பதவி வரமல்ல,சாபம் என அவனுக்கு தோன்றியது.

பேச்சுதுனைக்கு கூட ஆள் கிடையாது.பொழுதுபோக்கு எதுவும் கிடையாது.காலாகாலத்துக்கும் தனிமையே துனைவனாக வாழவேண்டியதுதான்.எறும்புகள் தான் துணை.அவையும் வெறும் முகஸ்துதி மட்டுமே செய்யும்.

எறும்பை மேற்பார்வை செய்யவா நான் இருக்கிறேன்?என் பழைய கம்பனியிலாவது தொழிலாளிகளை மேற்பார்வை செய்தேன்.இங்கு ஒரு எறும்புபுற்று,அதன் மேனேஜராக நான்.என்ன வேலை இது?

கடவுள் என்பவர் எறும்புப்புற்றின் நிரந்தர மேனேஜரா என்ன?

எனக்கு வேண்டாம் இந்த வேலை.

"ராஜினாமா" என அலறினான் சுந்து

***************

சுந்து தன் வீட்டுமுன் நின்றிருந்தான்.அசாத்தியமான தெளிவு அவன் மனதில் ஏற்பட்டிருந்தது.வீட்டுக்கு உள்ளே போனான்.

"ஏங்க லேட்டு" என ஆசையோடு அவன் மனைவி ஓடிவந்தாள்."நான் சண்டை புடிச்சது தப்புதாங்க.உங்க கிட்ட சண்டை புடிக்காம யார் கிட்ட பிடிப்பதாம்" என செல்லமாக கொஞ்சினாள்.

"அறிவிருக்கா உனக்கு?என் பின்னாடியே வர்ரே?வெக்கமா இல்லையா" எனும் சத்தம் கேட்டு சுந்து கதவை திறந்து பார்த்தான்.

விருமாண்டி கடவுள் புனிதாவிடம் திட்டு வாங்கிக்கொண்டிருந்தார்.சுந்துவை பார்த்ததும் லேசாக சிரித்தார்.

'அரேஞ்சுட் மேரேஜ் தாங்க கரெக்ட்" என்று கத்தினான் சுந்து.

கதவை சாத்தினான்.

"உனக்கு புருஷனா இருப்பது கடவுளாக இருப்பதை விட மேலானது தெரியுமா" என மனைவியிடம் சொன்னான் சுந்து.

"பொய்யி புளுகா" என அவன் கன்னத்தில் செல்லமாக இடித்தாள் அவன் மனைவி.

Friday, May 26, 2006

நான்கு நாட்கள்தான் :)

இணையத்தின் இனிய நண்பர்களே!வணக்கம்!

அன்பர் பலரின் வேண்டுகோளுக்கிணங்கி படைப்பை அனுப்புவதற்கான கடைசி தேதி மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

உங்கள் அன்பினால் பிறந்த இந்த "கூகுள் நம்பிக்கை குழுமம்" தனது முதலாம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31-5-2006இன்னும் 4 நாட்களே உள்ளன!

படைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன!

விரைந்து உங்கள் படைப்புக்களை அனுப்புங்கள். உங்களது முகவரியையும் , உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் தாருங்கள்!

ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களை அனுப்பலாம்!

உங்கள் பெயரை எடுத்தபின்னரே நடுவர் குழுவிற்கு படைப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே உண்மையான விமர்சனத்தை நீங்கள் பெற முடியும். முடிவுகள் வெளியாகும் போது அனைவரது பெயரும் வெளியிடப்படும்.

படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
1.பரஞ்சோதி paransothi@gmail.com
2.உமாநாத்(எ) விழியன் umanaths@gmail.com
3.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com

இந்த 3 மின்னஞ்சலுக்கும் அனுப்பி வையுங்கள்.

மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!
போட்டி விதி முறைகளை அறிய பழைய பதிவைப் பாருங்கள்!http://nambikkaioli.blogspot.com/2006/04/blog-post_21.html
உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி !

Wednesday, May 24, 2006

நம்பிக்கை போட்டிக்கான கதை - 106

உயர்வுள்ளல்


(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

அண்ணா பன்னாட்டு விமான நிலையம். சீரான ஓடுதளம். அதிகாலை சூரிய ஒளிபட்டு பனித்துளிகள் வானவில்லை பிறப்பித்துக் கொண்டிருந்தன. பரபரப்பான முகங்கள். அனைவரும் அவரவர் அலுவல்களில் பிஸியாகியிருந்தனர்.

பிரவீன் விமானநிலைய சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு ஹாயாக சோம்பல் முறித்துக்கொண்டிருந்தான். இன்னும் ஒரு மணி நேரம் அவகாசமிருந்தது. டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒரு விழாவில் தன்னை சிறந்த மென்பொருள் (டிகூஎம்)ர் எனத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பதற்காக அழைத்திருந்தனர். கண்களை மூடிக்கொண்டான்.

மனதில்தான் எல்லாம் அடங்கியிருக்கிறது, ஒருவனின் வெற்றியும் தோல்வியும் உட்பட. தன்னுடைய நிறுவனம் உலகிலேயே மென்பொருள் தரத்தில் முதலிடம் வகிப்பதாக ஜப்பான் நாட்டினர் தேர்ந்தெடுக்க மூலகாரணமே 'ஜேகே'தான். அன்று மட்டும் அந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணிசெய்தபொழுது அவர் மட்டும் தன்னை பணிநீக்கம் செய்யாமலிருந்தால்...? இந்த ஐந்தாண்டுகளில் மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரு ப்ராஜக்ட் மானேஜராக உயர்ந்திருப்பேன். அவ்வளவே! அந்த நிகழ்வு திரைப்படமாய் மனத்திரையில் ஓடியது.

அந்த பன்னாட்டு நிறுவனத்தின் வங்கிக் குழுவின் முதுநிலை மேலாளார் ஜேகே ஆட்குறைப்புப் பட்டியலுள்ள பெயர்களை வாசிக்க ஆரம்பித்தார். அனைவரின் முகத்திலும் பதற்றம், ப்ரவீனைத் தவிர. தன்னுடைய பெயர் அப்பட்டியலில் இருக்கக்கூடாதென எல்லாக் கடவுள்களையும் பணியாளர்கள் வேண்டிகொண்டனர்.


இறுதியில் "ப்ரவீன்" என்ற பெயரும் வாசிக்கப்பட்டது.

இது மிகப் பெரிய அதிர்ச்சி! யாராலும் இதை நம்ப முடியவில்லை. ஏனெனில் பிரவீன் ஒரு கடின உழைப்பாளி. இதற்கு முன்னால் நிறுவனத்திற்காக நிறைய சாதித்திருக்கிறான். தன்னுடைய திறமைகளை நன்கு வெளிப்படுத்தியவன். ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் தென்னிந்திய கிளைகளை கணணி மயமாக்கப்பட்டபொழுது தன்னுடைய குழுவை கட்டுக்கோப்பாக வழிநடத்தி மிகக் குறுகிய காலத்தில் பணியை முடித்தவன். தலைமை அலுவலகத்தின் எவ்வித உதவியும் இல்லாமல் எல்லா பிரச்சினைகளையும் தனி ஒருவனாகவே நின்று சமாளித்து நிறுவனத்திற்கும், முதுநிலை மேளாலர் 'ஜேகே' விற்கும் எவ்வித தலைவலியும் தராமல் வெற்றிகரமாக ப்ராஜக்ட்டை முடித்தவன். அவ்வங்கியின் வட்டார மேளாலரே மனதார வாழ்த்தியவர். ஒரு வாடிக்கையாளரிடமிருந்து வாழ்த்துப் பெறுவது என்பது மிகப் பெரிய விஷயம், இத்துறையில். இப்படி பெயரும் புகழும் சம்பாதித்தவனிற்கா பணிநீக்கம்...? மம்சாபுரம் வங்கிக்கிளையிலேயே நல்ல பெயர் வங்கியவனிற்க பணி நீக்கம்...?

நியாய தர்மங்கள் தோற்றுவிட்டனவா...? இதில் ஏதோ சூது நடந்திருக்க வேண்டும்.பிரவீனால் இதை ஜீரணிக்க முடியவில்லை.

மனிதவள் மேளாலர் கமலேஷ் குமர்ரை சந்தித்தான்.
"இப்பொழுது நம் கம்பனி மிகப்பெரிய நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே, நம் பணியாளர்களை லே ஆஃப் செய்கிறோம். ப்ளீஷ் சைன் ஹியர்..."

"என் பெயர் எப்படியோ இந்த படிவத்தில் தவறுதலாக வந்திருக்க்வேண்டும்..."

"இல்லை. உன் டிபார்ட்மெண்ட்லிருந்துதான் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்...."
"யார்...?"
"உன் சீனியர் மானேஜர் சுந்தரராமன்...."

சப்த நாடிகளும் ப்ரவீனுக்கு அடங்கிவிட்டது. முதுகில் குத்திவிட்டனரே...!
"டீ ப்ரேக்கில் கூட ஜேகேயும் சுந்தரராமனும் சிரித்து சிரித்துப் பேசினார்களே...."

இனியென்ன இருக்கிறது இவ்வுலகில்...? எல்லோருமே நம்பிக்கை துரோகிகள்...ப்ரவீன் தன்னுடைய கிரமத்திற்குச் சென்றான்.

பழங்கால பரந்த வீடு. கோபால்சாமி தாத்தா வயல்காட்டிற்குக் கிளம்பிக்கொண்டிருந்தார். நீண்ட வெண்ணிற தாடி. தும்பைப் பூ சலவை வேட்டி சட்டை. கதர்த்துண்டு. முகத்தில் ஒரு ஞானியின் பிரம்ம தேஜஸ். புருவ மத்தியில் சின்னதாய் வட்ட வடிவில் குங்குமம். இந்த 102 வயதிலும் திடகாத்திரமான நோய் நொடியில்லாத உடல். தீட்சண்யமான கண்கள். பழம்பெரும் சுதிந்திரப்போராட்ட வீரர். காந்தித்தாத்தாவும், வினோபாவும் இவருடைய ஆத்மார்த்தமான நண்பர்கள். அவர்கள் இந்த வீட்டிற்கு வருகை செய்த பெருமையுண்டு. ஊரே இக்குடும்பத்தின் மீது ஒரு மதிப்பு கல்ந்த மரியாதை வைத்திருந்தது.

பிரவீன் மனம் உடைந்து போனான். சோர்வாகக் காணப்பட்டான். வீட்டில் அனைவரிடமும் தனக்கு நேர்ந்த அநீதியைச் சொல்லி கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். கோபால்சாமித் தாத்தா, பேரன் பிரவீனை தன்னிடம் அழைத்தார்.


'என்ன பிரச்சினை...?"
விளக்கினான்.

தாத்தா அவனை தீர்க்கமாய் உற்று நோக்கினார்.

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எல்லாம் நன்மைக்கே...."

தன்னுடன் அழைத்துச் சென்றார்.

"என்ன தாத்தா நான் சீரியசாக பேசுகிறேன். நீங்கள் தத்துவம் பேசுகிறீகளே... உங்களுக்கி இது மாதிரி ஒரு சம்பவம் நடந்திருந்தால் தெரியும்...." தாத்தாவின் மீது கோபம் படர்ந்த்தது.

"யோசி...உன்னை பணி நீக்கம் பண்ணியதும் நன்மைக்கே. ஒருவனது எண்ணங்களுக்கும் அவனது சூழ்நிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த வாழ்க்கைச் சம்பங்கள் அக்காலகட்டத்திற்கு அவனது வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன..."

இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தி, 'ஆண்டவனின் ஒவ்வொரு செயலிலும் ஒரு செய்தி இருக்கும். அதில் ஆயிரம் உட்பொருட்களடங்கியிருக்கும்.


யோசி...யோசி....'

என்ன யோசிக்க...? முதுகில் குத்தியதையா...? துதிபாடிகள் அங்கே கோலோச்சுவதையா...? மேல்மட்டப் பதவியிலிருப்பவர்கள் உண்டு கொழுப்பதையா...?எல்லாவற்றிற்கும் மேலாக சேர்மன் எப்பொழுது சுகமான நித்திரையிலிருந்து கண்விழிப்பார் என்பதையா...?

இவனது மன ஓட்டங்களைப் புரிந்துகொண்ட தாத்தா தொடர்ந்தார்.
'ஓடு உடைபட்டால்தான் குஞ்சு வெளிவரமுடியும். தொப்புள் கொடி அறுந்தால்தான் குழந்தை தன்னிச்சையாக் சுவாசிக்க முடியும்...'

'...........'

'இதெல்லாம் ஏன் நடக்கவேண்டும்...?'

பிரவீன் யோசித்தான்.

அடுத்து என்ன...? அடுத்த கட்ட வளர்ச்சி...? என்ன செய்வது...? என்ன தீமானிப்பது...? எப்பொழுது ஆரம்பிப்பது...? எப்படி செயல்படுத்துவது...?

'யோசி...யோசி....உனக்குள்ளே விடை உள்ளது...'

'எனக்குள்ளேயா...?'

தாத்தா தரையில் அமர்ந்தார். தன் கைவிரலால் மணலில் ஒரு கோடு கிழித்தார்.

'இந்தக் கோட்டைத்தானே நீ மிகப்பெரிய பிரச்சினையாக கருதுகிறாய்...?
இதைத்தானே உன் வாழ்வி மிகப்பெரிய தடையாக எண்ணி கலங்குகிறாய்...?'

அதற்கு இணையாக அதைவிட ஒரு மிகப்பெரிய கோட்டைக்கிழித்துவிட்டு தீர்க்கமாய் பிரவீனைப் பார்த்தார்.

'உன் பிரச்சினைகளைவிட உன் பலமும் திறமையும் பெரிது என்று நீ
நம்பினால்....நீ எதிர்பார்த்ததைவிட பல மடங்காய் உயரலாம்....'


அவனுள் பொறி தட்டியது.

அப்படியானால் நான் ஏன் ஒரு ஜீ.எம். ஆக உயரக்கூடாது...?

தாத்தா அவனின் உள் மன உணர்வுகளை உணர்ந்தார்.

'யானை தன் பலத்தை உணர்ந்தால் பிச்சை எடுக்குமா...?'

'இதெல்லாம் சாத்தியமா தாத்தா...? என்னால் முடியுமா..?'

'ஏன்...?'

'ஜீ.எம். ஆக எனக்கு முன் அனுபவம் இல்லையே தாத்தா...? எனக்கு

நம்பிக்கை இல்லை....'

'பி.டி.உஷா தெரியுமா...?'

'ம்..'

'அவருக்கும் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபொழுது ஓடிய அனுபவம் இல்லை.


எப்படி சாத்தியமாச்சி...? 'ஒருவன் தான் எண்ணியதை மறவாத நினைப்புடன்
தொடர்ந்து முயல்வானானால், அவன் எண்ணியவண்ணமே அதை அடைதல் எளிது'னு வள்ளுவர் சொல்றார்...'

உற்சாகமாய் சென்னை திரும்பினான். விண்ணப்பித்தான். ஜீ.எம்.முக்குரிய முன் அனுபவம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டான். சுவற்றில் அடிபட்ட பந்தாய் தாத்தாவிடம் திரும்பினான்.

'இதுவும் நன்மைக்கே....' சிரித்தார்.

'யோசி...யோசி...யோசனையில்தான் செயல்களின் விதைகள் அடங்கியுள்ளது....வாழ்க்கையில் ஒரு கதவு மூடும்பொழுது இன்னொரு கதவு திறக்கப்படுகிறது. நாம் நமக்காகத் திறக்கப்பட்டக் கதவை கவனியாது மூடிய கதவையே உற்று நோக்குகிறோம்....'

'அந்த திறக்கப்பட்ட கதவு எது...?'

'நீ ஏன் ஒரு ஜீ.எம்.முக்கு வேலை கொடுக்கக்கூடாது...?'

'நான் எ.. ப்..படி...?'

மெல்ல புரிய வந்தது.

'அதற்கு வாய்ப்பு...?'

'அதோ அந்த கொக்கு மீன்களை எப்படிக் கண்டுபிடிக்கிறது...? பாம்பு எப்படித் தவளையைக் கண்டுபிடிக்கிறது....? தேவைகளின் அடிப்படையில்தானே...?'

'ஓ...!' பிரகாசமானான் பிரவீன். தெளிவானான். உற்சாகமாய் சென்னை கிளம்பினான். ஏற்கெனவே இவன் அந்த அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் கிளைகளை கணணிமயமாக்கப்பட்டபொழுது அதன் வட்டார மேலாளர் தனக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய ஆசைப்படுவதாகக் கூறியிருந்தார். சந்தித்து உரையாடினான். கடன் கிடைத்தது. 'ஷ்ரப்டிக்' என்று ஒரு மென்பொருள் நிறுவனம் துவங்கி டோக்கியோவில் விருது வாங்குமளவிற்கு வளர்ந்தாகிவிட்டது. எல்லாம் மனதில்தான் உள்ளது.

டோக்கியோவில் விருது வாங்கியதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். சென்னை திரும்பியாயிற்று. ஆனாலும் ஏதோ ஒன்று மனதைப் பிசைந்து கொண்டிருந்தது. மனதில் ஒரு நிம்மதியின்மை. மீண்டும் தாத்தாவைச் சந்தித்தான்.

'பேராசை, சினம், கடும்பற்று, வஞ்சம், முறையற்ற பல் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை.. இந்த ஆறில் ஏதோ ஒன்றோ அல்லது பலவோ காரணமாயிருக்கும். இந்த அறு தீய குணங்களையும் வெளியேற்று... எது என்று, எப்படி என்று யோசி....'

என்ன அது...? ஏன்...? எப்படி...? விருது வாங்கியும் மனதில் நிம்மதியும் சந்தோசமும் இல்லையே ஏன்...?

'எப்படி இந்த உயர்ந்த நிலையை அடைந்தாய்...?'

'படிப்படியாய் உழைத்து முன்னேறி...'

'அப்படியானால் இதற்கு முன்னால் நீ உழைக்கவில்லையா...? மூலம் எது...?'

பணி நீக்கம்...

யாரால்...? ஏன்...? எதனால்...?


ஜேகே....

ஆக ஒன்று புரிகிறது. ஜேகே இன்னமும் அடி மனதில் ஒரு மூலையில் இருக்கின்றார். இருக்கட்டும். நல்லதுதானே...? அதனால்தானே முன்னேறினேன்....?'


'அப்படியானால் உன்னை வேறு யாரோ ஆட்டுவிக்கின்றனர்....உன் கண்ட்ரோல் உன்னிடம் இல்லை...?'

'.......!?'

எது...? எது...? வஞ்சம்தான் என் முன்னேற்ர்த்திற்குக் காரணமா...? என்ன செய்யலாம்...? என்ன பரிகாரம்...? வஞ்சம் ஏன் வருகிறது...? பழியுணர்ச்சி மனதில் தேக்கப்படும்பொழுது...! அந்த எண்ணத்தை எப்படி மனதிலிருந்து எடுப்பது...?

'மன்னித்து விடு...மனதார மன்னித்துவிடு...எதிரியையும் நேசி...'

ஜேகே அந்தப் பன்னாட்டு நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு பல மாதங்களாகிவிட்டது. பிரவீன் பழங்களுடன் ஜேகே வீட்டிற்குச் சென்றான்.

ஜேகேவிற்குப் பேரதிர்ச்சி..! இருவரும் மனம் விட்டுப்பேசினர். தன் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற முடியும...? என்று கேட்டான்.

ஜேகேயின் கண்களில் குளம் குளமாய் நீர் வழிந்தோடியது. இப்பொழுது இருவருக்குமே மனம் இலேசாகியிருந்தது.

Tuesday, May 23, 2006

கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலை இல்லை







கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலை இல்லை

எனது பெயர் Nick Vujicic . என்னை படைத்த இறைவனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என்னை மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாக படைத்ததற்காக நான் பெருமைப்படுகின்றேன்.

இப்படி யாராவது சொல்லக்கூடுமா..? சொல்லக்கூடும் இறைவன் தனக்கு வளமான வாழ்வு கொடுத்து - நல்ல உடலமைப்பு கொடுத்திருந்தால்.ஆனால் பாருங்களேன் இந்த மனிதரை.


கைகள் மற்றும் கால்களின் பகுதிகள் எதுவும் இல்லாமல் பிறந்தாலும் இந்தக்குறை இறைவன் என் மீது அன்பு வைத்திருப்பதால்தான் என்று கூறுகின்றார்.
நாம் ஏதாவது சின்ன பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டால் கூட "அய்யோ எனக்கு மட்டும் இறைவன் இப்படி பண்ணிவிட்டானே" .." அப்படி பண்ணிவிட்டானே" என்று இறைவனை திட்டி தீர்த்துவிடுவோம்.

சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் மனம் தளர்ந்து ஒடிந்து போய் இருப்பவர்களுக்கெல்லாம் இந்த மனிதர் தன்னம்பிக்கை தருகின்ற பாடமாக இருக்கின்றார்.

தனது பிறப்பினை இத்தனை பேருக்கு சாட்சியாக - மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் படி வைத்த இறைவன் தன்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கின்றான் என்று சொல்லும் அளவிற்கு பக்குவப்பட்டிருக்கும் மனிதர் இவர்

சமீபத்தில் கூட நான் பார்த்த டிஷ்யும் என்ற படத்தின் வசனத்தில்; உயரம் குறைவாக உள்ள மலையாள நடிகர் பற்றிய ஒரு காட்சி :

அந்த உயரம் குறைவான நடிகரின் கதாபாத்திரம் காணுகின்றவர்களிடமெல்லாம் கடன் வாங்குவார் ஒரு தடவை சிறுவர்களிடம் கடன் வாங்கி விட அந்தச்சிறுவனின் தந்தை வந்து அவரைத்திட்ட இதனைக்கண்ட கதாநாயகன்

"ஏண்டா இப்படி அவமானப்படுத்துற.. சின்னப்பையன்களையெல்லாம் ஏண்டா ஏமாத்துற..ச்சே எனக்கு வெட்கமா இருக்குடா" என்று கடிந்து கொள்வதைப் பார்த்து அவர் ஒரு வசனம் சொல்லுவார்

"டேய் ..நான் செய்வது தப்புதாண்டா..ஆனா நான் வெளியில் சென்றால் என் உருவத்தைக் கண்டு கிண்டல் செய்கின்றார்கள். அவர்கள் என்னை கிண்டல் செய்வதைத்தடுக்கத்தான் இந்த கடன் வாங்கும் முயற்சி.."

"என்னைக் கண்டு கிண்டலடிப்பவர்கள் எல்லாம் அய்யோ இவன் வந்தால் கடன் கேட்பான் என்று ஓடி ஒளிவதைக்கண்டு எனக்குள் ஒரு சந்தோஷம்..என்னை யாரும் கிண்டலடிக்க மாட்டார்கள் அல்லவா..

தப்பு செய்யாத மனுசனே இல்லைடா..ஏன் கடவுளே தப்பு செய்திருக்கான்..பின்னே என்னை இப்படி படைச்சது அவனோட தப்புதானே..?"

என்று சொல்லிவிட்டும் செல்லும் காட்சி மனசை உருக்குகின்ற காட்சி. இப்படி எல்லா மனிதர்களுமே தவறை கடவுள் மீது போட்டுவிடுவார்கள்.

தன்னை மட்டும் கடவுள் குறைகளோடு படைத்துவிட்டானே என்று இவரைப்போன்று குள்ளமாகப் பிறந்ததற்கு அல்லது உடல் ஊனமாய் பிறந்ததற்கு வருத்தப்படுபவர்களுக்கு மத்தியில் பாதி உடலே இல்லாமல் பிறந்தாலும் இதயம் முழுமையடைந்துப் பேசும் இவரை கண்டால் அதிசயமாகத்தான் இருக்கின்றது.


உங்களுக்கு எத்தனை துன்பங்கள் அல்லது போராட்டங்கள் வந்தாலும் அதனை மறந்து விட்டு மகிழ்ச்சியாய் இருக்க கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் இவரின் பிரச்சாரம்.

1982 ம் மாதம் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிறந்தார் அவர். இவருடைய தந்தை ஒரு சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிபவர் .

கை - கால்கள் இல்லாமல் பிறந்த தங்களுடைய முதல் குழந்தையைக் கண்டு அதிரிச்சியுறற பெற்றோர்கள் பின்பு நிதானமாய் சொல்லியிருக்கின்றார்கள்; "கடவுளை வேண்டிக்கொள்வோம்" என்று.

மருத்துவர்கள் கூட இதற்கு மாற்று வழிதெரியாமல் திகைத்துப்போய் நின்று விட்டனர். இதற்கு மருத்துவ ரீதியாக காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.


ஆனால் தற்பொழுது நிக்கிற்கு ஒரு தங்கையும் தம்பியும் நல்ல உடல் ஆரோக்கியத்தில் மற்ற குழந்தைகள் போல பிறந்திருக்கின்றார்கள்.

நிக்கின் குறைபாடுகளைக் கண்டு இவர் பிறந்தவுடன் இவருடைய தந்தைக்கு அனைவரும் துக்கம் சொல்ல வந்துவிட்டார்கள். அனைவருமே ஆதங்கப்பட ஆரம்பித்து விட்டார்கள் " அன்பின் உருவமாக - அன்பின் கடவுளாக இருக்கும் இறைவன் - இதுபோன்ற குறைபாடுள்ள குழந்தையை ஏன் இந்த அளவிற்கு மதப்பற்றுள்ள அவனையே நாள்முழுவதும் துதிக்கின்ற ஒரு பாதிரியாருக்கு கொடுக்க வேண்டும் என்று.

இப்படி கை - கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தை சீக்கிரத்தில் இறந்து விடும் என்றுதான் அவருடைய தந்தை நினைத்திருக்கின்றார்.ஆனால் நிக் உடல் குறைபாடே தவிர ஆரோக்கியமான குழந்தையாகதான் இருந்தார்.

"என்னுடைய பெற்றோர்கள் முதலில் அதிர்ச்சியுற்று எனக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் அமையுமோ என்று பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இறைவன் அவர்களுக்கு மன - உடல் வலிமையைக் கொடுத்து தைரியத்தையும் கொடுத்திருக்கின்றான். " என்று கூறுகின்றார்.

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் கை- கால்கள் இல்லாமல் அவரும் அவரின் சுய தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவருடைய பெற்றோர்களும் அவரும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று.

குழந்தைகள் என்றால் நாம் அதன் கையைப்பிடித்து அதன் மிருதுவான விரல்களை பிடித்து தடவுவோம். அதன் பிஞ்சு விரல்களை எடுத்து நம் கன்னத்தில் வைப்போம்.

அந்தக் குழந்தையும் நம்முடைய பெரிய கண்களை - மூக்கினை - வாயினை கண்டு ஆச்சர்யப்பட்டு தனது பிஞ்சு விரல்களால் நோண்டி நமக்கு இன்ப வேதனையைக் கொடுக்கும்.

குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் அந்த தத்தல்களின் முதன்நடைக்காக எத்தனை பெற்றோர்கள் ஏங்கியிருப்பார்கள். அதனைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

அட எம்பையன் நடக்க ஆரம்பிச்சுட்டான் பாரு..

வா..வா..வாடா..என்று தூரத்தில் அவனை நிற்கவைத்து அவனை தன் பக்கம் வரச்சொல்லி

அவன் தத்தி..த..த்..தி நடந்து நெருங்கும்பொழுது கீழே விழுந்து விடுவானோ என்ற ஆர்வ மிகுதியில் தாய் அவனைப் பாதி தூரத்திலையே பிடித்து அணைத்துக்கொண்டு
எம் பையன் நடக்க ஆரம்பிச்சுட்டான்..ஆரம்பிட்டான் என்று செல்லமாய் குதூகலிப்பார்களே..?

அதுபோன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம் கொடுத்து வைக்காத பெற்றோர்களாக அவர்கள் போய்விட்டாலும் மனம் தளர்ந்து போகாமல் நிக்கை படிக்க வைத்திருக்கின்றனர்..

அதற்கும் அவர்கள் போராட வேண்டியதிருக்கின்றது. நிக் பள்ளிக்கு செல்லுகின்ற பருவம் வந்ததும் Main Stream பள்ளியில் சேர்ப்பதற்காக முயன்றபொழுது ஆஸ்திரேலிய நாட்டின் சட்டப்படி உடல் ஊனமுற்ற குழந்தையினை சேர்க்க அந்தப்பள்ளி மறுத்துவிட அவனது தாய் அந்த நாட்டின் சட்டத்திற்கு எதிராக போராடி நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி நாட்டின் சட்டத்தை மாற்ற வைத்து நிக்கை பள்ளியில் சேர்த்திருக்கின்றனர். அந்தப்பள்ளியில் படிக்கின்ற முதல் ஊனமுற்ற மாணவன் நிக் மட்டுமே..

பாருங்களேன் நிக்கின் தெளிவான பக்குவப்பட்ட உரையினை :






"இப்படி போராடுவதற்கான முயற்சிகளை இறைவன் எனது தாய்க்கு தந்ததற்காக நான் இறைவனுக்கு கடமைப்பட்டுள்ளேன்.

முதலில் நான் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளானேன். என்னால் மற்ற மாணவர்கள் போல இருக்க முடியவில்லை. நான் மற்றவர்களால் வெறுக்கப்பட்டு, ஒரு விநோத பிராணியைப்போல பார்க்கப்பட்டு, மூன்றாம் தரமாய் நடத்தப்பட்டு உடன் படிக்கின்ற மாணவர்களால் கேலி , கிண்டலுக்கு உள்ளானேன். அப்பொழுதெல்லாம் எனது பெற்றோர்கள் தந்த ஊக்கமும் ஆதரவும்தான் எனக்கு ஆறுதலாய் இருந்தது

சில சமயங்களில் சக மாணவர்களின் அதிகமான கேலி , கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டு பள்ளிக்கு செல்ல பிடிக்காமல் இருந்தபொழுது எனது பெற்றோர்கள்தான் என்னைச் சமாதானப்படுத்தி மற்ற மாணவர்களோடு நண்பர்களாக உன்னை மாற்ற முயற்சி செய்யச் சொன்னார்கள் .

நானும் அவர்களுடன் கிண்டலாக பேசிக்கொண்டும் சில வேடிக்கையான செயல்களை அவர்களுக்கு முன்னால் செய்து காட்டி அவர்களை சிரிக்க வைத்து கலகலப்பு ஊட்ட ஆரம்பிக்க. நானும் அவர்களைப்போன்ற உணர்வுகள் உள்ளவன்தான் என்று அவர்களும் நாளடைவில் உணர ஆரம்பித்தார்கள்.
இறைவனின் அருளால் என்னைச் சுற்றி புதிய புதிய நண்பர்கள் நல்ல நட்போடு பழக ஆரம்பித்தார்கள்.

எனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று யாரையும் இதற்கு குற்றம் சொல்ல முடியவில்லையே என்ற வேதனையில் நாட்கள் செல்ல ஆரம்பிக்க எனக்கே என்மீது வெறுப்பு ஆரம்பித்தது கோபம் வர ஆரம்பித்தது . சண்டே பள்ளியில் சேர்ந்த பிறகு நான் கற்றுக்கொண்ட விசயம் கடவுள் எல்லாரையும் விரும்புகின்றான் ஆனால் என்மீது மிகுந்த அக்கறையாக உள்ளான் என்று.

ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. இறைவன் என் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்றால் ஏன் என்னை இப்படி படைக்க வேண்டும் ?. நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா? என்று கேட்டுக்கொண்டே சில சமயம் என்னுடைய வாழ்க்கையையே முடித்துக்கொள்ள தீர்மானித்தேன். ஆனால் என்னுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு வாழவேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

சுற்றியுள்ளவர்களின் வார்த்தை பிரயோகங்களிலிருந்தும் முகச்சுளிப்புகளிலிருந்தும் வித்தியாசமான பார்வைகளின் கொடுரங்களிலிருந்தும் தனிமையில் கழித்த பொழுதுகளிலிருந்தும் வாழ்க்கையில் போராடுவதறகான அனுபவங்களை பெற்றுக்கொண்டேன்.

இறைவன் எனக்குண்டான இந்த குறைபாடுகளிலிருந்து மற்றவர்கள் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட கவலையில் மூழ்கி விழுந்து விடக்கூடாது . ஏதாவது ஒரு வகையில் சோகங்களை கொடுத்து ஏதாவது ஒரு வகையில் மகிழ்ச்சியைக் கொடுப்பான் இறைவன்.

உங்களுக்கு இதனை உணர்த்தவே என்னைத்தேர்ந்தெடுத்துள்ளான் இறைவன்.

எனக்கு தற்பொழுது 21 வயதாகிறது . நான் Bachelor of Commerce majoring in Financial Planning and Accounting முடித்துள்ளேன். எனக்கு இறைவன் பேச்சுக்கலையை கொடுத்திருக்கின்றான்.

அதன் மூலம் எல்லா இடங்களுக்கும் சென்று என்னுடைய கதையை மற்றவர்களுக்கு சொல்லி சின்னச் சின்ன சோகங்களில் மூழ்கிக்கிடப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்போகின்றேன்.


எனக்கு நிறைய சாதிக்க வேண்டும் என்ற கணவுகளும் லட்சியங்களும் இருக்கின்றது. நான் கடவுளின் அன்பைப்பெற்றவன் என்று மற்றவர்களுக்கு சாட்சியாக இருக்கின்றேன் என்பதில் பெருமை.

என்னுடைய கதையை நான் புத்தகமாக வெளியிடப்போகின்றேன். அதன் தலைப்பு
கைகள் இல்லை. கால்கள் இல்லை. கவலையும் இல்லை..

"No Arms, No Legs, No Worries!"

கை - கால்கள் இல்லாமலையே தான் சாதிக்க வேண்டும் என்ற வெறியோட இருக்கும் நிக் பேன்றோர்கள் தன்னம்பிக்கை இழந்தவர்களுக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு.

உணவு உண்பதற்கும் எழுதுவதற்கும் - நடப்பதற்கும் - தண்ணீர் குடிப்பதற்கும் - ஏன் தன் இயற்கைக்கடன்களை நிறைவேற்றுவதற்கு கூட இன்னொருவரின் உதவி வாழ்நாள் முழுவதும் இவருக்கு தேவைப்படுகின்றது.

இன்னொருவரின் சார்பு இல்லாமல் இவரால் வாழ்நாளைக் கழிக்க முடியாத போதிலும் இவர் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் என்றால் இவர் நம்பியிருக்கும் அந்த இன்னொருவர் இறைவன் தான். அவர் சாதிப்பதற்காக நாமும் பிரார்த்திப்போம்.

ஆகவே பரிட்சை தோல்வி - காதல் தோல்வி - கடன் பிரச்சனை - சொந்தங்களோடு பகை - மனைவியுடன் சண்டை - வேலையின்மை - அவமானங்கள் இதுபோன்ற சின்னச் சின்னத் துன்பங்களுக்கெல்லாம் மனம் வருந்தி முடங்கிப்போய்விடாமல் தன்னம்பிக்கையோடு போராடுவோம்.

மனித வாழ்க்கையில் தோல்வி வெற்றிகள் - இன்ப துன்பங்கள் அடுத்தடுத்து வருகின்ற ஒரு சுழற்சிதான்.

தோல்வி வருகின்ற நேரத்தில் அதிக அளவு சோகப்படாமலும்
வெற்றி வருகின்ற நேரத்தில் அதிக அளவு மகிழ்ச்சிபடாமலும் வாழ்க்கையை அனுபவிப்போம்.

வாழுகின்ற இவ்வுலக வாழ்க்கை என்பது கொஞ்சகாலம்தான். யாரும் இறைவன் விதித்துவிட்ட நாட்களுக்கு ஒரு நாள் அதிகமாகவே அல்லது குறைவாகவோ வாழப்போவதில்லை.

(நன்றி: முத்தமிழ் & 'நிலவுநண்பன்' ரசிகவ் ஞானியார்)

தம்பி தங்கைகளே!

அன்பிற்கினிய தம்பி தங்கைகளே!

பள்ளிப் படிப்பை முடித்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

சிலர் தாம் நினைத்த மதிப்பெண்களை அடைந்து மகிழ்ச்சியில் இருப்பர்! சிலர் நினைத்த மதிப்பெண் இன்றி துக்கத்தில் செய்யும் வகையறியாது இருப்பர். யான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். மதிப்பெண் குறைந்து போனது என்று நீங்கள் இனியும் வருத்தப் படுவதில் கொஞ்சமும் லாபம் இல்லை. உங்களை நீங்களே நொந்து கொள்வதாலோ! முகத்தை தொங்க விட்ட படி அலைவதாலோ, பித்து பிரேமை பிடித்தவன் போல் இருப்பதாலோ மதிப்பெண் ஒன்றும் கூடிவிடப் போவது இல்லை.

தவறு செய்து விட்டீர்கள். முதலில் அதை ஒத்துக் கொள்ளுங்கள். 12 வருட பள்ளிப்படிப்பின் முக்கியத்துவத்தை இப்போதாவது உணர்ந்து இருப்பீர்கள். உணர வில்லை எனில் உங்கள் கதி அதோ கதிதான். சரி விசயத்திற்கு வருகிறேன்.

நீங்கள் இனி செய்ய வேண்டியது ஒன்றுதான். இனி நான் தொடுக்கும் செயலில்/படிப்பில் வெற்றி மட்டுமே என் கண்ணுக்கு தெரியும் என்று ஒரு உறுதியான முடிவு எடுக்கவேண்டும். அதற்காக உழைக்க வேண்டும்.

ஆறுதலாய் ஒரு மொழி! வெறும் +2 மதிப்பெண்கள் மட்டும் ஒருவனை பேரறிஞன் ஆக்கி விடாது. சில உறுதியான திட்டங்களை நீங்கள் கைக்கொள்ள வேண்டும்.

நடந்தது நடந்து விட்டது. நடக்கப் போவது இனி நாம் எப்படி செயல்படப் போகிறோம் என்பதைப் பொருத்தே இருக்கிறது. எனவே,அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை முடிவு செய்யுங்கள்.

நீங்கள் அடைந்த தோல்வி உங்களுக்குள் அடுத்து நீங்கள் அடையப் போகும் வெற்றிக்கு தூண்டலாக இருக்கட்டும்.

நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும்.

வெற்றி மட்டும் இனி உங்கள் கண்களுக்கு தெரியட்டும்

அன்புடன்,
அண்ணன்.

Monday, May 22, 2006

நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 305

வீரனுக்கு அழகு துல்லியம்

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை. படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

நம்பிச் சாவது கோழி
நம்பாமல் வாழ்வது காக்கை
மாறாமல் இருந்து அழிந்தது டினோசர்
மாறிக் கொண்டே வாழ்வது பச்சோந்தி

பறவை மிருக ஜாதி தரும் பாடம்
மனித ஜாதிநம்பிக்கைக்கு ஒரு வரம்

மாறாமல் இரு எனச் சொல்வது
சொல்பவர்க்கு நல்லது
மாறிக்கொண்டே இருப்பது
கேட்பவர்க்கு நல்லது

மாறாத உலகில்
மாற்றம் ஒன்றே நிரந்தரம்

காலத்துக்கேற்ற மாற்றம்
தரும் வாழ்வில் ஏற்றம்
இது புரியாமல் புலம்புவது
யாருடைய குற்றம் ?

பொறுத்துபோ, புறக்கணி, கடந்துபோ

Sunday, May 21, 2006

நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 205

ஆன்மீகக்கட்டுரை

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கட்டுரை. படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், "(பசித்தோருக்கு)உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் (நன்மாராயம்) கூறுவதுமாகும்" என்று கூறினார்கள்.

"உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான ஈமான்) இறை நம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார்"

"அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக் கைக் கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் (ஒன்று)நல்லதைப் பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் "

"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் விருந்தாளிக்கு தமது கொடையை கண்ணியமாக வழங்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்)கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! அவருடைய கொடை என்ன? என்று கேட்கப்பட்டது அதற்கு அவர்கள்(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு(உபசரிப்பது)ஆகும். விருந்து உபசாரம் மூன்று தினங்களாகும் அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்)அவருக்கு தர்மமாக அமையும். மேலும் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் (ஒன்று)நல்லதைப்பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்"

மேற்கண்டவை நபிவழித் தொகுப்பான புகாரி கிரந்தத்தில் காணப்படும் இஸ்லாமிய போதனைகள்.

மேலும்,
"அண்டைவீட்டான் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் உண்மையான இறைநம்பிக்கையாளனாக மாட்டான்" என்றொரு நபிமொழி உண்டு.

(எந்த மதமாக, ஜாதியாக இருந்தாலும்) அடுத்துள்ளவனின் பசியை உணரத் தூண்டும் இத்தகைய பொன்மொழியை உணர்ந்து நடந்தாலே இன்று உலகில் நிலவும் ஏராள பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

ஒரு தனிமனிதனுக்கு உறவினரை விடவும் ஆபத்துஅவசரத்துக்கு உதவ வருபவன் அண்டைவீட்டானே. அதே போல ஒரு வீட்டார் அதிகம் பிரச்னைகளை எதிர்கொள்வதும் தமது அண்டை வீட்டாரிடம் தாம்.

அண்டைவீட்டாரின் நலம் பேணுவது குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அறிவுரை பகன்ற போது 'எங்கே, நமது சொத்துக்கும் அவர்களை (அண்டை வீட்டாரை) வாரிசாக்கிவிடுவார்களோ' என்று நாங்கள் யோசிக்கும் அளவுக்கு எங்களுக்கு அறிவுரையளித்தார்கள் என்பது நபித் தோழர்களின் கருத்தாக இஸ்லாமிய வரலாற்றில் காண முடிகிறது.

தனி மனிதனுக்கு அண்டை வீட்டுக்காரன் எனில் ஒரு தெருவுக்கு அடுத்த தெரு, ஒரு மாநிலத்துக்கு அண்டை மாநிலம், ஒரு நாட்டுக்கு அண்டை நாடு என்ற அளவில் சிந்தித்துப் பார்த்து அண்டை அயலவர்களின் உணர்வுகளை மதிக்கத் தொடங்கினால் இன்று நிலவும் நதிநீர் பிரச்னை, பயங்கரவாத பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

குர்ஆனிலும் பிற இஸ்லாமிய ஆதாரங்களிலும் 'இடம் பொருள் ஏவல்'உடன் சொல்லப்பட்டுள்ள சில கருத்துக்களை வைத்துக்கொண்டு இன்று முஸ்லிம்களை எதிர்(த்தாகவேண்டிய கட்டாயத்திலிரு)ப்போரும் அதற்கு எதிர்வினையாக முஸ்லிம்களும் காரியமாற்றி ஒருவருக்கொருவர் வெறுப்பையும் கசப்பையும் விசிறிவிட்டுக்கொள்கின்றனர். இப்போக்கு எல்லாத்தரப்பிலும் உண்டு.

இத்தகையவர்கள் எல்லா மதத் தூதர்களும் ஒரே மூலத்திலிருந்தே வந்தனர் என்பதை உணர்ந்து நடந்து உலகில் அன்பு தழைக்க உதவிடுவார்களாக!

'பாவிஷஹார்' புராணத்தில் 'ஏதாச மின்னேந்த மிலேச்ச' என்று தொடங்கும் வரிகளுடன் "ஒரு மிலேச்சர் (வெளிநாட்டுக்காரர்) தனது தோழர்களுடன் வருவார். அவர் மணல் நிறைந்த பகுதியிலிருந்து வந்து தீமைகளை அழிப்பார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதர்வன வேதத்திலும் 'போற்றப்படுபவர்' (முஹம்மது) வருவார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ரிக் வேதத்திலும் முன்னறிவிப்பு உண்டு.

இதன்டிப்படையிலேயே அனைத்து தூதர்களும் ஒரே மூலத்திலிருந்து தோன்றினர் என்று நான் குறிப்பிடுகிறேன்.

எனவே, தன்னுடைய மதத்திற்கு உண்மையாக இருக்க விரும்பும் யாரும் (ஹிந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவரோ, அல்லது பிறரோ) பிற மனிதர்களிடத்தும் அன்பு செலுத்தி 'மனித நேயம்' தழைக்கப் பாடுபடவேண்டும் என்று உணர்வோமாக.

Friday, May 19, 2006

நம்பிக்கை போட்டிக்கான கதை - 105

300 $

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை. படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

பெங்களூர் விமான நிலையம். மணி இரவு 11 மணி. சிங்கபூரிலிருந்து வந்த விமானிகள் அனைவரும் வெளியே வந்துகொண்டிருந்தோம். என் கையில் இருந்த ஒரேயொரு லக்கேஜை பார்த்த கஸ்டம்ஸ் அதிகாரி எதுவும் கேட்காமல் போக விட்டார். 'Welcome to Bangalore' சொல்லி கையில் பூங்கொத்தை கொடுத்த அந்த கெம்ப்ஃபோர்ட் மங்கை என்னை வித்தியாசமாக பார்த்தாள். வழக்கமாக வரவேற்க வந்தவர்கள்தான் ப்ளகார்ட் வைத்திருப்பார்கள். ஆனால் ஃப்ளைட்டில் வந்த நான் கையில் ப்ளகார்ட் வைத்திருந்தேன். அவளை பார்த்து புன்னகைத்தேன். ஐந்து மணி நேரம் முன்பு வரை நான் மட்டும் என்ன இப்படி ப்ளகார்டுடன் வருவேன் என்றா நினைத்தேன்!

ப்ரீபெய்ட் டாக்சி கெளன்ட்டரில் ஆர்டி நகருக்கு ஒரு சீட்டு வாங்கிவிட்டு வெளியேறினேன். ஆர்டி நகரில்தான் கெளதமின் வீடு உள்ளது.

லேசான மழை பெய்து பெங்களூர் வழக்கம் போல் நசநசப்பாக இருந்தது. என்னுடன் பயணித்த கார்த்திக் என்ற சாஃப்ட்வேர் பையன் என்னிடம் 'I still feel very guilty Sir... Hope God forgives me... Buh Bye..' என்று சொல்லிவிட்டு 'மச்சான், எப்பிட்றா இருக்க' என்று கேட்டுக்கொண்டு அவன் நண்பர்களை நோக்கி 555 பாக்கெட்டை காட்டிக்கொண்டே ஓடினான்.

'அனந்தநாராயணன்' என்ற பெயரெழுதிய ப்ளகார்ட்டை உயர்த்தி பிடித்தேன். கூட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டியதுதான். அனந்தநாராயணன் அவரது மகனைத்தான் தேடிக்கொண்டிருப்பாரே தவிர இதை பார்க்கப்போவதில்லை. டாக்சி, ஆட்டோ என்று நச்சரிப்புதான் தாங்கவில்லை. கூட்டம் அடங்கியபின் 10-15 பேர்தான் அங்கே இருந்தார்கள். டாக்சி, ஆட்டோக்காரர்களும் இது தேறாத கேஸ் என்று கிளம்பிவிட்டார்கள். அந்த 15 பேரில் வயதான ஜோடி ஒன்று தான். அவர்களாகத்தான் இருக்க வேண்டும். பெரிய மீசை, கிருதா எல்லாம் வைத்திருந்தார் அந்தப்பெரியவர். ஏனோ அவரைப்பார்த்தால், அந்த காலத்து ரிவொல்யூஷனரி இளைஞரைப்போல் இருந்தது. நிறைய ஜெயகாந்தன் கதைகள் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர்கள் அருகில் சென்றேன். என் கையில் இருந்த ப்ளகார்ட்டை சற்று குழப்பமாக பார்த்தார்கள்.

'நீங்க.... அன... Mr. அனந்தநாராயணன் தானே?'

'ஆமா... ஆனா நீங்க... நீங்க யாருன்னு தெரியலயே...'

'என் பேரு ஸ்ரீனிவாஸ்... கெளதமோட friend...'

அந்த வயதான அம்மாள் முகத்தில் கலவரம்.

'கெளதம் எங்கே?'

'அவர் வரல... என் கிட்ட இந்த லெட்டரை குடுத்து அனுப்பினார்... ' என்று சொல்லி ஒரு கவரை நீட்டினேன்.

'முந்தா நாள் கூட டிக்கெட் கன்ஃபர்ம் ஆயிடுத்துன்னு ஃபோன் பண்ணானே...' என்றாள் அந்த அம்மாள், என்னை சந்தேகத்துடன் பார்த்தபடியே!

கவரை பிரித்துக்கொண்டே 'இன்னிக்கு அவனுக்கு மெயில் பண்ணிப்பார்த்தேனே... ஆட்டோ ரிப்ளை கூட எனேபில் பண்ணியிருந்தானே.... வர்ற வழில ஏதானு?' என்றார் அவர்.

'ஒன்னும் ஆகல அங்கிள்... கவல படாதீங்க... சிங்கப்பூர்லேந்து அவர் அவசரமா திரும்பிபோற மாதிரி ஆயிடுத்து...'

'என்னப்பா சொல்ற? சிங்கப்பூர் வரை வந்துட்டு திரும்ப போய்ட்டானா? என்ன ஆச்சு?'

'பொண்டாட்டி கொழந்தேளுக்கு ஏதானா? சீக்கிரம் சொல்லுப்பா... நேக்கு தலய சுத்திண்டு வர்றது...'

'ஒன்னும் இல்லை மாமி... கவல வேண்டாம்... வாங்க, வீட்டுக்கு போகலாம். உங்கள வீட்டு வரைக்கும் ட்ராப் செய்யச்சொல்லி கெளதம் சொல்லியிருக்கார்' என்று டாக்சி ஸ்டாண்ட் நோக்கி நடந்தேன். டாக்சியில் ஏறிய பிறகு அவர்கள் கெளதமின் லெட்டரை படித்துக்கொண்டு வந்தார்கள். அதற்குள் நாம் சிங்கப்பூரில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

சிங்கப்பூர் விமான நிலையம்.

சியோலில் இருந்து வந்து இறங்கியவுடன் நேராக ஃப்ரீடூருக்கு பதிவு செய்யும் கவுண்ட்டருக்கு சென்றேன். அங்கு எனக்கு முன்பே பெரிய கூட்டம் இருந்தது. சன் ஃப்ரான்ஸிஸ்கோவிலிருந்து வேறொரு விமானமும் வந்திருந்தது. அடுத்து பெங்களூர் செல்லும் விமானம் இன்னும் 6 மணி நேரம் கழித்து தான் கிளம்பும். அதனால் அந்த கூட்டத்தில் நிறைய இந்திய தலைகள். அந்த கூட்டத்தில் ஒருவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்தார். பார்த்தாலே தெரிந்தது, அமெரிக்காவில் செட்டில் ஆகி எப்போதாவது இந்தியா செல்லும் நபர் என்று. இவர் தமிழர் போல இருந்தார். மனைவி கண்டிப்பாக வட நாட்டை சேர்ந்தவள். குழந்தைகள் அமெரிக்க வளர்ப்பு!

திடீரென்று அவருக்கு முன்னால் இருந்த வாலிபர்களை பார்த்து கத்தினார்.

'Speak another word and you are dead, you sonafabitch....'

அவர் கண்கள் சிவந்திருந்தன.

ஹே என்று கத்தியபடி அந்த வாலிபர்கள் கையை உயர்த்தி ஹை ஃபைவ் செய்து கொண்டு சிரித்தார்கள். அப்படி என்ன கிண்டல் செய்திருப்பார்கள் என்று யோசித்தேன். ரொம்ப நேரம் அவர் தன் மனைவியிடம் ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தார். அவளும் பதிலுக்கு என்னமோ சொல்லிகொண்டே வந்தாள். 'atrocious' என்ற வார்த்தை மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டது. அவர்களுக்குள் சண்டையா இல்லை அந்த வாலிபர்களை திட்டுகிறார்களா என்று புரியவேயில்லை.

இரண்டு மணி நேர டூரில், விமான நிலையத்தை விட்டு வரும்போதே அரை மணி நேரம் முடிந்திருந்தது. பேருந்தில் என் அருகில் அந்த குறும்புக்கார இளைஞர்கள் அமர்ந்தார்கள். கைடை கவனிக்க விடாமல் ஏதாவது தொந்தரவு செய்வார்களோ என்று பயந்தேன். நல்லவேளை சமர்த்து பையன்களாகவே வந்தார்கள். கைடு தான் அனாவசியமாக சிரித்து எரிச்சல் ஏற்படுத்தினார். சிங்கப்பூர் நகரம் முழுதையும் பேருந்தில் இருந்தபடியே பார்த்தோம். சிங்கப்பூரின் தேசிய நாள் விரைவில் வரவிருந்ததால், பல சாலைகள் மூடப்பட்டு இருந்தன. இருந்தும் அந்த கைடு லாவகமாக சென்று சிங்கப்பூர் ஆற்றில் கொண்டு விட்டார். போட்டிங் செல்லும் போது அந்த வாலிபர் கூட்டத்திற்கு புகைப்படங்கள் எடுக்க உதவி செய்தேன். திரும்ப விமான நிலையம் வரும் வழியில், ஒரு இளைஞன் பேச்சு கொடுத்தான்


'ஹலோ... '

'ஹாய்'

'என் பேரு கார்த்திக்... யூஎஸ் லேந்து வர்றோம் நாங்க எல்லாம்... பெங்களூர் போய்கிட்டு இருக்கோம்...'

'ஓ... நான் ஸ்ரீனிவாஸ்... நான் ஒரு டாக்டர்... சியோல்ல ஒரு கான்ஃபரன்ஸ் அட்டென்ட் பண்ணிட்டு வர்றேன்... நீங்க எல்லாம் யூஎஸ் ல வேலை பாக்கறீங்களா?'

'இல்ல இல்ல... பெங்களூர்லதான் வேலை... ஆன்சைட் போய்ட்டு வர்றோம்... 9/11 க்கு அப்புறம் நிறைய வேலை அவுட்சோர்ஸ் ஆயிட்டதால, அங்க பெர்மணெட்டா போக வழியில்ல....'

'அதனால என்ன... இந்தியாலயே I am sure you guys are paid well... Moreover, Standard of Living is also coming up, இல்லையா?'

'ஆமா ஆமா... அத போய் அந்த ரெண்டாவது ஸீட்ல உக்காந்திருகான் பாருங்க, அவன் கிட்ட சொல்லுங்க...' என்று க்யூவில் கத்திய நபரை காட்டினான்.

'என்ன சண்டை அவர் கூட? ஏர்போர்ட்லயே கத்திக்கிட்டு இருந்தார் உங்கள பாத்து...'

'SFO லேந்தே பிரச்சினை டாக்டர் அவன் கூட... கைல யூஎஸ் சிடிசன்ஷிப் இருக்குங்கற திமிரு... செக்கின் பண்ண க்யூல நிக்கும் போதே சண்டை போட்டான்... These Desi Buggers ஆம்... 10-15 வருஷம் முன்னாடி இவன் என்னவோ தெரியல... அதோட அவன் பொண்டாட்டி வேற, ரொம்ப பேசறா.... பாருங்க, பஜாரி மாதிரியே இருக்கா...'

'ஹேய்...'

'சாரி சார்... அவங்க மேல இருந்த கோவத்துலதான் I had to use such words... அப்புறம், we had big arguments... இந்தியால அது சரியில்ல, இது சரியில்லன்னு ரொம்ப பேசினான்... ரொம்ப திமிர் சார் இவனுங்களுக்கு, பத்து வருஷம் முன்னாடி பொறந்து போய்ட்டாங்க, இல்லன்னா இங்க தான் இருக்க போறாங்க... அதுல இந்தியா பத்தி கொற சொல்ல என்ன தகுதி இவங்களுக்கு?'

'Yeah Right...'

'அப்டி கசப்பா இருந்தா இந்தியா எதுக்கு சார் வரணும் இவனுங்க? அங்கேயே இருக்க வேண்டியது தானே?'

'I totaly agree with you... ஆனா, if you do not mind, I would make a comment...'


'சொல்லுங்க....'

'எனக்கு, as a third person, நீங்க பேசறத பாத்தா, நம்பளால போக முடியலயேங்கற வருத்தம் தான் தெரியுது... அதுதான் கோவமா மாறி அவரை திட்ட சொல்லுது...'

ஒரு நிமிடம் என்னை முறைத்து பார்த்தான். பிறகு 'May Be' என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டான்.

இறங்கும்போது அந்த அமெரிக்க வாழ் இந்தியரை பார்த்தேன். பயங்கர டிஸ்டிர்ப்டாக இருந்தார். ஏனோ அந்த கார்த்திக் & கோ மீது எனக்கு கோபமாக வந்தது.


மீண்டும் சிங்கப்பூர் விமான நிலையம். பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு கொஞ்சம் சாக்லேட்ஸ் வாங்கிக்கொண்டேன். பெங்களூர் விமானம் கிளம்ப இன்னும் 2 மணி நேரம் இருந்தது. ட்ராவல் ஏஜென்ட் ஏதோ ஒரு லெளஞ்சுக்கு ஒரு கூப்பன் கொடுத்தது ஞாபகம் வந்தது. டெர்மினல் 1ல் இருந்து ஸ்கைபஸ் பிடித்து டெர்மினல் 2 வுக்கு சென்று அந்த ரெயின் ஃபாரஸ்ட் லெளஞ்சை கண்டுபிடிப்பதற்க்கே 15 நிமிடங்கள் ஆகிவிட்டன.

அங்கே ரிஸப்ஷனில் அனுமதி சீட்டை காட்டி உள்ளே போக காத்திருந்தேன். கார்த்திக் & கோ அங்கிருந்த சிங்கம்-புலி பொம்மைகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று பக்கத்திலிருந்த சைபர் கஃபேயிலிருந்து பஜாரி என்று கார்த்திக்கால் அழைக்கப்பட்ட பெண்மணி கத்திக்கொண்டே வந்தாள்.

'This is the limits Goutham... Bahut ho gaya... What does you brother think of himself?'

பின்னாலேயே கெளதம்.

'Savitha.... Listen to me... Please... He is a frustrated soul... Even we have made mistakes...'

'Whatever it is... Me nahi jaa rahi hun udhar... If you want, you can go...'

இவ்வாறு கத்திக்கொண்டே உள்ளே சென்று விட்டாள் அவள். பாவமாக பார்த்தபடியே கெளதமும் உள்ளே சென்றார். கார்த்திக் சொன்னது சரிதானோ என்று ஒரு நிமிடம் யோசித்தேன்.


டாக்சி இப்போது தான் ஏர்போர்ட் ஜங்க்ஷனை கடந்திருந்தது. அதற்குள் இவர்கள் லெட்டரை படித்து முடித்துவிட்டபடியால், நாம் சிங்கப்பூரில் நடந்த மீதி கதையை அப்புறம் பார்ப்போம்.

'என்னங்க இது... இப்டி பண்ணிட்டானே.... எல்லாம் அந்த ராட்சஸி பண்ற வேலை....'

'ஹூம்... என்னத்த சொல்றது... இந்த சித்தார்த்துக்கும் வேற வேலை இல்ல... அவா கிட்ட சண்டை போடணும்னா வந்தப்புறம் போடறது... அப்டி என்னதான் எழுதினானோ தெரியல மெயில்ல...'


'கொழந்தேள் வராளேன்னு பட்சனம் எல்லாம் பண்ணி வெச்சேனே... எல்லாம் பாழ்....'

'அதுதான் முக்கியம் பாரு இப்போ... ரெண்டு வருஷம் கழிச்சு புள்ளைய பாக்க போறோமேன்னு கனவு கண்டுண்டு இருந்தேன்...'

'என்ன கனவு கண்டேளோ போங்கோ... அப்போவே அடிச்சுண்டேன்... அமெரிக்கா எல்லாம் வேண்டாம்... இங்கேயே வேல பாக்கட்டும்னு... கேக்காம அனுப்பினேள்... இப்போ சொந்தமே அறுந்து போயிடுமோன்னு இருக்கு...'


'என்னத்துக்கு அழற இப்போ... சொந்தமெல்லாம் அறுந்து போகாது... என்னமோ என்னையே கொறை சொல்றியே... அவன் அங்க போனதுனால தான் இன்னிக்கு சந்தோஷமா வாழ முடியறது... இன்னிக்கு இத்தனை நகை போட்டுண்டு சுத்தறியே... எல்லாம் எதுனால?'

'நம்ம புள்ளையே நம்மள வேண்டாம்ன அப்புறம் காசு நகையா முக்கியம்? எதுவுமே வேண்டாம் நேக்கு....'

'கொஞ்சம் ப்ராக்டிகலா யோசி... இன்னிக்கும் அவன் அனுப்பற அந்த 300 டாலர்லதான் காலம் ஓடிண்டு இருக்கு... அது இல்லன்னா இந்த சித்தார்த் மட்டும் மதிப்பான்னு நினைச்சுண்டு இருக்கியா? அது தெரிஞ்சு தான் இனிமே பாக்க வரமாட்டேன் ஆனா பணம் மட்டும் அனுப்பறேன்னு எழுதியிருக்கான் கெளதம்'


'சித்தார்த் அப்பிடி என்ன தான் எழுதி தொலைஞ்சானோ மெயில்ல... போய் நாலு வார்த்தை கேக்கறேன் அவன....'

கண்டோண்மெண்ட் ஸ்டேஷன் வந்து விட்டோம். அவர்கள் குடும்ப விஷயங்களை கேட்டு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். நான் நெளிவதை பார்த்து அவர்களும் அப்புறம் பேசவில்லை. அதற்குள் நாம் மீண்டும் சிங்கப்பூர் செல்வோம்.

ரெயின்ஃபாரஸ்ட் லெளஞ்சுக்குள் சென்று ஒரு கப்புச்சினோ எடுத்துக்கொண்டு அமர்ந்தேன். எதிர் டேபிளில் வந்து கெளதம் தன் குடும்பத்துடன் வந்து அமர்ந்தார். அரை தூக்கத்தில் இருந்த குழந்தைகள் இருவரும் அப்பா-அம்மா வின் சண்டை புரியாமல் விழித்துக்கொண்டிருந்தன. பக்கத்து டேபிளில் இருந்த கார்த்திக் மற்றும் குழுவினர் கூட சற்று ஆடித்தான் போனார்கள் இவர்கள் சண்டையை பார்த்து.


'Dekho Gautham, after this kinda insult, do ya think any sane person would go and meet ua brother?'

'Do take it as an insult, my dear..' மன்றாடினார் கெளதம்.


'What? I read the email... He calls me a bitch... 'Do not get that bitch here'.... Aah, how can you stand this Gautham?'

'To kya hua? Are they tryin to restrain him atleast? I am not going to go to your place... I will take the next flight to Delhi from Bangalore... You can come there when you want...'


'Hey Bhagwaan..' என்றபடியே நாற்காலியில் சாய்ந்தார் கெளதம். அவரை தூக்க அனைவரும் ஓடுனோம், கார்த்திக் உட்பட.

கெளதமின் வீடு வந்துவிட்டது. அதனால் மீதி சிங்கப்பூர் கதை அப்புறம்.

அந்த frustrated soul ஆன சித்தார்த்தை வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வாசலிலேயே நான் கிளம்புகிறேன் என்றேன். ஆனால், கெளதமின் அப்பா அம்மா உள்ளே வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள்.

என்னை சோஃபாவில் அமர வைத்து விட்டு உள்ளே சென்றார்கள். கசமுசாவென்று உள்ளேயிருந்து சத்தம் வந்தது. திடீரென்று ஒருவன் ஏதோ கத்திக்கொண்டே வெளியே வந்தான். என்னைப்பார்த்ததும் லேசாக புன்னகைத்தவன்,

'தாங்க்யூ சார், இனிமே இந்த பக்கம் தலை வெச்சே படுக்க கூடாதுன்னு சொல்லிடுங்க அந்த அரக்கி கிட்ட, I am sorry, if you are a friend of hers...'


'Well, நான் யாருக்கும் friend இல்ல... சும்மா ஏர்போர்ட்ல பாத்தேன், அவ்ளோதான்...'

அப்போது அழுதுகொண்டே வந்த அவனுடைய அம்மா அவனைப்பார்த்து கேட்டாள்,

'அப்டி என்னடா எழுதி தொலைஞ்ச அந்த ஈமெயில்ல?'

'சவிதாவ தாம்மா கூட்டிண்டு வர வேண்டாம்னு சொன்னேன்... இவனையா வர வேணாம்னு சொன்னேன்... உன் ஜேஷ்ட குமாரன் பொண்டாட்டி தாசனா இருக்கான்... அதுக்கு என்ன என்ன பண்ண சொல்ற?'


'அவ வந்தா உனக்கென்னடா... வந்து நாலு நாள் இருந்துட்டு டெல்லி போய்ட போறா...'

'அந்த நாலு நாள் தான வம்பே.... போன தரம் ஞாபகம் இருக்கா? நீ ஆசையா பண்ணின பட்சணத்த அந்த பசங்கள சாப்ட விடாம தடுத்தா... என் குழந்தைகளோட விளையாட விடல... கேட்டா ஹைஜீனாம்... அப்போ நாம எல்லாம் வியாதில வாழ்ந்துண்டு இருக்கறவாளா?'

'இனிமே வரவேமாட்டேன்னு லெட்டர் அனுப்பியிருக்கான் பாருடா... உங்கள எப்பிடியெல்லாம் வளத்தோம்டா... ஒத்துமையா இருப்பேள்னு.... இப்டியா அடிச்சுண்டு நிப்பேள்...'


'அட போம்மா... நீங்களே சொல்லுங்க சார்... அவன இஞ்சினீயரிங் படிக்க வெச்சு அப்புறம் அமெரிக்கா அனுப்பி இவங்க சீராட்டினதுக்கு அவன் காட்டின மரியாதை, அங்கேயே கல்யாணம் பண்ணிண்டு வந்து நின்னதுதான்! அப்புறம் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தரம் வந்து படம் காட்டிட்டு போறது... அவன் போடற ரொட்டித்துண்டுக்காக இவங்களும் அவன் சொல்றத எல்லாம் கேட்டுண்டு இருக்கறது...'

இவனை frustrated soul என்று கெளதம் சொன்னதில் அர்த்தம் இருப்பதாகவே பட்டது. ஆனால் அந்த Frustration ல் ஒரு நியாயம் இருப்பதாகவும் பட்டது.

இதைக்கேட்டவுடன் கெளதமின் அப்பாவிற்கு அசாத்திய கோபம் வந்தது.


'ஏண்டா மூணாவது மனுஷா முன்னாடி இப்பிடியெல்லாம் பேசற?' என்றார்.

பதிலுக்கு சித்தார்த்தும் எகிறினான்

'ஏம்பா என்ன திட்ற? இவர் கிட்ட நம்மள பத்தி அவன் என்னவெல்லாம் சொல்லி இருப்பான் லெட்டர் குடுக்கறச்சே... அதான் அவன பத்தியும் தெரியட்டும்னு சொல்றேன்...'

'அதெல்லாம் இல்லை, நான் கிளம்பறேன் இப்போ... எனக்கு ரொம்ப லேட் ஆகுது...'

'Okay Sir, நீங்க கிளம்புங்க...' என்றான் சித்தார்த்.


இவர்களிடம் சிங்கப்பூரில் நடந்த உண்மையை சொன்னால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று யோசித்தபடியே எழுந்து நடந்தேன்.

கீழே விழுந்த கெளதமை மெள்ள அங்கிருந்த கட்டிலில் கிடத்தினோம். மாசிவ் ஹார்ட் அட்டாக். அங்கிருந்த லிமிடெட் மருந்துகளை கொண்டு என்னாலான முதலுதவியை செய்தேன். வேறு டாக்டர் வர 20 நிமிடங்களாவது ஆகும் என்றார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்தது. அமெரிக்க பிரஜையின் பூத உடல் என்பதால் அதற்கு ராஜ மரியாதை. சவிதா சத்திய தைரியமான பெண். சுத்தமாக அலட்டிக்கொள்ளவேயில்லை. உடனடியாக அமெரிக்கன் எம்பஸியை தொடர்பு கொண்டு என்னென்னவோ பேசினாள்.

என்னிடம் பஜாரி எனப்பட்ட அந்த சவிதா வந்தாள். அவள் கண்கள் சற்று கலங்கியிருந்ததாக தோன்றியது. என்னதான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் கணவன் இறந்துபோன துக்கம் இருக்காதா!

'Hello Doctor, I hope you are travelling to Bangalore...'

'Yeah...'

'Would you do me a favor?'

அவளுடைய கணவனின் பெற்றோர் மற்றும் தம்பி அவனை நம்பியிருப்பதை பற்றியும், அவன் இறந்து போன விஷயம் தெரிந்தால், அவர்கள் எவ்வளவு துக்கம் அடைவார்கள் என்றும் சொன்னாள். ஏற்கனவே அவள் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பையும் சொன்னாள். அதனால், இப்போது இந்தியா செல்வது சரிப்படாது என்றாள். அவளுடைய சொந்தங்களைப்பற்றி தெரியவில்லை. அவளும் சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை.

மேலும் கெளதமின் தம்பி அனுப்பியிருந்த ஈமெயிலை காரணமாக அவர்கள் அனைவரும் திரும்ப அமெரிக்க சென்றுவிட்டதாக சொல்லி, என்னையே லெட்டர் எழுதச்சொன்னாள். அதில் மாதம் 300 டாலர் அனுப்புவதாகவும் எழுதச்சொன்னாள். எழுதிவிட்டு நிமிர்ந்துபார்த்தேன். புரிந்து கொண்டவள்,

'I will send it every month... After all this is the least I could do for my Goutham' என்ற அவளது கண்கள் குளமாகின.

'I am very sorry, we should not have spoken like that...'

யாரென்று பார்த்தால், கார்த்திக்! அவர்கள் கேலி செய்ததால் தான் அவருக்கு நெஞ்சு வலி வந்தது என்று ரொம்ப கில்டியாக ஃபீல் செய்தான்!

டாக்சியில் ஏறும் போது,

'உங்க சாக்லேட்ஸ விட்டுட்டு போறீங்க...' என்றபடியே சித்தார்த் வந்தான்.

'ஓ... Thanks... Bye...'

'One more thing...'

'...'

'கண்டிப்பா மாசம் 300 டாலர் அனுப்பறதா சொன்னானா சார்?'

Thursday, May 18, 2006

நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 304

இளமையில் 'கல்'

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

வயதுகளைத் தவிர்த்து
ஒற்றுமையில்லை நமக்குள்.
பள்ளிக்கூடம் உன் உலகம்.
உலகம் என் பள்ளிக்கூடம்.

பெயர்த்தெடுக்கப்பட்ட
தண்டவாளத் துண்டுகள்.
பாடசாலை மணியோசை.
மொழிபெயர்த்தால்...'நாம் இணைகளில்லை'.

உன் முதுகில்
பாடப்புத்தகங்களின் சுமை.
என் முதுகிலோ
யாருடைய வாழ்க்கையோ?!

எங்கள் 'கறுப்பு மை' பூசி
பொலிவடைந்து விடுகின்றன
எஜமானர் வாழ்க்கையும்

கைத்தட்டல்கள்
உன் வெற்றிகளை எதிரொலிக்கும்
எம் பெயர்களையும்.

கற்கும் ஆசை
கனலாய் தகிக்க...
கந்தகம் தோய்க்கும்
இளைய மரக்குச்சிகளில்
வறுமையின் வெறுமை.

பள்ளிக்கூடத்திற்கு வெளியே
உனை ஈர்க்கும் வேடிக்கைகள்
தின்பண்டங்களினூடே
நீ காணக்கூடும்
எம் இளம்பிராய ஆசைகளையும்

வணிக வயலில்
பணப்பயிராகிவிட்ட கல்வி.
ஒற்றைப்பாடம்
இன்னமும் பொதுவில்:
'உழைப்பு உயர்வு தரும்'.

Wednesday, May 17, 2006

நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 204

நம்மை நாம் அறிவோம்

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கட்டுரை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

எல்லாம் தெரிந்தவன் நான் ஒன்றைத் தவிர!! நான் யார் என்பதுதான் அது !!!அதுதான்தெரியவில்லை!!நாம் விரும்பி இவ்வுலகத்தில் பிறக்கவில்லை!!அன்னை,தந்தை இணைந்த தயவால் பிறந்தோம்.அதே போல்தான் மரணமும்!நம்மைக் கேட்டு வரப்போவதில்லை.விரும்பாவிட்டாலும் கண்டிப்பாக வந்து சேரும்!ஏன் இந்த ஜனனம் மற்றும் மரணம்!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது!!ஆனால் அரிதானப் பிறவியை எடுத்துவிட்டோம்,எடுத்து சாதித்தது என்ன!!சாதிக்கப் போவது என்ன!

இதுவரை சாதித்தது என்ன!!இதுவரை யாரை எல்லாம் துன்பபடுத்தி இருக்கிறோம்!!எத்தனை பேரை மகிழ்ச்சியாக்கி உள்ளோம்!!உள்ளன்போடு எத்தனை பேருக்கு உதவி உள்ளோம்!!கடனே என்று விருப்பமில்லாமல் உதவி உள்ளோம்!!உதவுவதாக நடிக்கிறோம்!!

நான் யார் என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புங்கள்,அங்குதான் ஆரம்பமாகிறது தந்நிலை அறிதல்!!அதுதான் ஆத்ம விசாரணை!!ஒவ்வொருவரும்,பிறவி எடுத்தவரும் தன்னுள்ளே பேசி ஆத்ம விசாரணை செய்ய ஆரம்பித்தால் நாம் பிறவி எடுத்ததின் ரகசியம் புரிய ஆரம்பிக்கும்!!

மனிதன் என்பவன் யார்? உள்ளம்,புத்தி, மனம் ,உடல் என்று விரிந்திருப்பவன்!இதில் எதையும் தனித்துப் பார்க்க இயலாது!!எல்லாம் இணைந்துதான் இயங்கும்!!வெளி உடல் எப்படியோ அப்படித்தான் உள் உடலும்!!அதனுள்ளும் பல அடுக்குகள் உண்டு!!என்ன வெளியில் காணும் உடலை ஸ்கான் செய்யலாம்!!மனத்தினுள் எப்படி ஸ்கான் செய்ய!!வழி உண்டு!!!

தன்னை நோக்கி தானே செய்யும் ஆத்ம சோதணைதான் அந்த ஸ்கான்!!உடல் பயிற்சி ,யோகா ,நடை பயிற்சி எப்படி உடலுக்கு வலு, மற்றும் ஆரோக்கியம் அளிக்கிறதோ மனம் சம்பந்தப்பட்ட உடலுக்கும் மனக்கட்டுப்பாடும், பயிற்சியும் தேவை.

இதற்குத் தேவை தூய்மையான மனம்.தூய்மையான உடல்,மனச் சாந்தம் ,மனோசக்தி, நல் ஆரோக்கியம் !!!!

மனம் அமைதியின்றி இருக்கும்போது என்ன செய்ய!!மன நாட்டம் இன்றி செய்யும் அனைத்து செயல்களும் வீணே!!

மனம் சிறிதாவது அமைதியாக இருந்தால்தான் உணர்ச்சி வசப்படுதல், கோபம், அவசரம், படபடப்பு, முறையற்ற காமம், பழிவாங்கும் எண்ணம், பகைமை, தேவையற்றப் போட்டி போன்றவை இல்லாமல் இவ்வாழ்க்கையை மனம் எதிர்கொள்ளும்!!

தினமும் அதிகாலையோ, அதாவது பிரம்ம மூகூர்த்த நேரத்தில் அல்லது உறங்கும் முன்போ மனத்தை நோக்கி உங்களுக்குள்ளேயே கேள்வியை எழுப்பத் தொடங்குங்கள்!!

அதுதான் விசாரணை!! ஆம் ஆத்ம விசாரணை!!கேள்வியும் நீங்களே!!பதிலும் நீங்களே!!உங்கள் மனத்துக்குள்ளேயே விடையைக் காண முயலுங்கள்!!

ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணத்தை தேட முயலுங்கள்!!சிலர் நல்ல நிலையிலும்,சிலர் துன்பப் பட்டும் இருக்கிறோம்!!இதற்கான விடையைத் தேட முயலவும்!!இறுதியில் அப்படியென்றால் நான் யார் என்றக் கேள்வியைக் கேட்டு பதில் காண முயலுங்கள்!!

திடீரென்று உயிர் பிரிகிறது!!டாக்டர் வந்து உயிர் பிரிந்ததற்கான காரணத்தை சொல்கிறார்!!ஹார்ட் அட்டாக் என்கிறார்!!!உண்மையில் அதுதான் காரணமா!!யோசியுங்கள்!!அட்டாக்கால் மரணமில்லை பயணம் முடிந்துவிட்டது!!அதனால்தான் மரணம் என்று யாரும் ஏற்றுக்கொள்வதில்லையே!!

மன அமைதியின்றி,மன நாட்டமின்றி ,மன ஈடுபாடு இன்றிசெய்யப் படும் இறைவனது சேவை எவ்விதத்திலும் உதவாது!!

எனவே நான் யார் என்றக் கேள்வியை எழுப்பி ,பின் யோகம்,தியானம் என்றுத் தொடருங்கள்!!முதலில் குழப்பங்கள் மறையும்!!

பின் புதிய வாழ்க்கைதான்!! ஒளி,செயல்வேகம்,சக்தி, ஞாபக சக்திப் பெற்று இன்பமோ இன்பம்தான் !!!

இறைவனும் தெரிவானே!!

Monday, May 15, 2006

நம்பிக்கை

தண்ணீரில்
மீன்கள் வாழலாம்.

கண்ணீரில்
மனிதன் வாழலாமா?

பயிர்களின் நடுவில்
களைகள் நிலைக்கலாம்.

மனிதனின் மனதில்
கவலைகள் முளைக்கலாமா?

பணத்தை கூட
மனிதன் இழக்கலாம்
தன்னம்பிக்கையை இழக்கலாமா?

மனிதா சிந்கித்துப் பார்
உனது நேரத்தை
நீ வீணடித்து விடாதே.


த. நேரு, வெண்கரும்பூர்.

நன்றி: தினத்தந்தி – இளைஞர் மலர்

Saturday, May 13, 2006

நம்பிக்கை போட்டிக்கான கதை - 104

அக்னிப் பூ...

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

சங்கரா! வந்துவிட்டாயா...என் மகனே... ஆர்யாம்பிகை வயிற்றிலிருந்து பீரிட்ட குரல் வேகம் சங்கரரை அசைத்தது.

ஆர்யாம்பிகைக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

அம்மா... என்னை அடையாளம் தெரிந்து கொண்டாயா ? மகிழ்வுடன் சங்கரர் கேட்டார்.

சங்கரா.. எப்பவும் உன் நினைவு தான். உன்னைத் தவிர வேறு யாரையும் எனக்கு அடையாளம் தெரியாத நிலை ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மறந்து போனால் தானே உன்னை நினைப்பதற்கு ? எல்லாம் நான் என்று சொல்லும் உனக்கு எல்லாம் நீ என்று வாழும் அம்மா. உனக்கு விசித்திரமா இருக்கிறதா ? என்று கேட்டபடியே
ஆர்யாம்பிகை மயங்கிவிட இவ்விதம் அடிக்கடி நினைவு தப்பி விடுகிறது என்று சுற்றியிருந்த உறவினர் சங்கரரிடம் கவலையோடு உரையாடினர்.

அன்று பகல் முழுவதும் அம்மாவுடன் பேசியபடியே படுக்கையில் மூச்சு திணறும் அம்மாவின் மார்பைத் தடவிக் கொடுத்தபடியே சங்கரர் இருந்தார்.

மாலை வேளையில் மயக்கம் களைந்து அம்மா விழிப்பு நிலைக்கு வந்தபோது, சங்கரர் அவரைச் சாந்த நிலைக்குக் கொண்டுவர எண்ணி அத்வைத உபதேசங்களையும், தம் வாழ்வனுபவங்களையும் பேசலானார்.

அம்மா நான் இப்போது பிரும்ம சூத்திரத்துக்கு நான் எழுதிய விளக்கத்தை ஒட்டி எழுந்த அத்வைத தத்துவத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அமைதியாக என் பேச்சைக் கேளுங்கள். மனச்சாந்தி அடைவீர்கள் என்று சொல்லிவிட்டு சங்கரர் தன் நீண்ட விளக்கத்தைத் துவங்கினார்.

உலகம் ஒரு தோற்றமே. கனவுலகில் ஒரு வாழ்க்கையும், நலவுலகில் ஒரு வாழ்க்கையும் நாம் வாழும்போது கனவுலகம் நமது வேட்கையைத் தீர்ப்பதுபோல நலவுலகமும் ந்மது வேட்கையைத் தீர்க்கிறது. இதில் எது உண்மையான நிலை ? என்ற கேள்விக்கு என் பார்வையில் எது எந்தக் காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடியதோ அதுவே உண்மை.
மேலும், இரண்டு உலகையும் நாம் பேச அனுமதிக்கும் அறிவே இந்த உணர்விற்க்குக் காரணம். இந்த அறிவு மூன்று நிலைகளை உடையது. கனவு நிலை, நனவு நிலை, உண்மையை உணரும் ஞான நிலை. ஒவ்வொரு நிலையும் அடுத்த நிலைக்கு நம்மைக் கூட்டிச் செல்லும் படிகள். இதற்கு உதாரணமாக கயிற்றைப் பாம்பென்று எண்ணுவது ஒரு கனவு நிலை. கயிறு தான் என்று தெரிவது நனவு நிலை. இந்த இரண்டும் ஒன்று என அறிவது ஞான நிலை.

அறியாமையின் தன்மைக்குத் தக்கபடி உயிரின் தன்மையும் மாறும். சுருக்கமாகச் சொன்னால் பிரும்மம் உலகாகத் தோன்றுவதும், உயிர்களாக மாறுவதும் ஒரு மாயை. உண்மையில் ஒரு உயிர் பல உயிர்களாகத் தோன்றுகிறது.மேலும், பிரும்மம் மாயையினால் இயங்கத்துவங்கியதும் இறைவனாக மாறிவிடுகிறது. இந்த இறைவனால் இரண்டு தொழில்கள் இடைவிடாது நடக்கின்றன.

1. உள்ளது மறைக்கப்படுகிறது.

2. இல்லாதது தோற்றுவிக்கப்படுகிறது.

இங்கு மறைக்கப்படுவது பிரும்மம், தோற்றுவிக்கப்படுவது உலகம். இந்த வகையில் இறைவனும், உயிரும் பிரும்மஸ்வரூபிகளே. இவை அத்வைத தத்துவத்தில் மாயை எனவும் அவித்யை எனவும் சொல்லப்படுகின்றன.

ஆனால், அம்மா, "தண்ணீரில் சந்திரனுடைய பிரதிபிம்பம் ஆடுவது தண்ணீரின் ஆட்டத்தால் என்று அறியாதவன் சந்திரனே ஆடுவதாய் என்ணுவதைப்போல சில சமயம் மனதில் ஒரு ஆட்டம் ஏற்பட்டுவிடுகிறது."

ஜகத்குரு என்றழைக்கப்படும் உனக்கா இந்த கலக்கம். ஏன் மகனே ?

குமாரில பட்டர் என்பவர் பெளத்த மதத்தை நிராகரிக்க எண்ணினார். அந்த எண்ணத்தின் தூண்டுதலில் அவர் பெளத்த மதத்தைப் பற்றிய கல்வியறிவைப் பயில பெளத்தராக மாறினார். கல்விகற்ற பின் தம் அரசன் சுதன்வன் துணைக்கொண்டு அப்பெளத்தர்களை வாதத்தில் வெற்றி கொண்டார். அரசன் பெளத்தர்களைத் தோல்வி காரணம் காட்டி தண்டனையாக அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டான். அச்செயல் குமாரில பட்டரைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்து தற்கொலைக்குத் தூண்டிவிட்டது. குற்றவுணர்வுக்குக் காரணம் குரு துரோகம் - புத்த பிஷூக்களிடம் கற்ற கல்வியைக் கொண்டே அவர்களையும் பெளத்தத்தையும் அழித்துவிட்டது.

அவருக்கு நான் அத்வைத மார்க்கத்தைச் சொல்லி, கர்மத்திலிருந்து எவரும் விடுபட முடியாது என்ற அவரின் வாதத்தைத் தவறு என்று ஒப்புக்கொள்ள வைத்து கர்மாவை நாம் செய்கிறோம் என்ற எண்ணத்தோடு செய்தால் தான் அது நம்மை பீடிக்கும். அந்த எண்ணமில்லாமல் ஈஸ்வரார்ப்பணம் என்று செயலை எண்ணி விட்டால் துக்கத்திலிருந்து விடுபடலாம் என்று போதித்தேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

நல்லது தானே செய்துள்ளாய் மகனே? கலக்கம் எங்கு வந்தது ?

அம்மா விஷயம் அதோடு முடியவில்லை. மேலும் கேளுங்கள். குமாரில பட்டரின் பேச்சைக் கேட்டு மீமாம்சகர் பலரை அத்வைதவாதிகளாக மாற்ற எண்ணி மண்டனமிச்ரரையும், அவரது மனைவி சரஸவாணியையும் வாதத்தில் வெல்ல, கூடுவிட்டுக் கூடுபாய்ந்து சம்சாரியாக ஒரு வாழ்க்கை சில நாட்கள் வாழ்ந்துவிட்டேன். அந்த வாழ்க்கைக்கு ஒரு பாவமும் அறியாத அமருகனின் மனைவியைப் பயன்படுத்தினேன். இச்செயல் என்னை அவ்வப்போது கலக்கமடையச் செய்கிறது.

மகனே, நீ எழுதிய அமருகம் என்ற நூல் இந்தச் செயலின் விளைவா ? என்னால் நம்ப முடியவில்லை.

ஆம் அம்மா. அமருகன் நினைவாக இல்லற வாழ்வியல் பற்றிய எனது நூலுக்கு அமருகம் என்று பெயரிட்டேன்.

இப்போது மனக்கலக்கம் அடையும் நீ அவ்விதம் செய்யக் காரணம் என்ன மகனே ?
என் பார்வையில் ஆன்மாவுக்கும் உடலுக்கும் தொடர்பில்லை. உடலுகுரிய கனவு, விழிப்பு ஆகிய நிலைகளை நான் கடந்துவிட்டவன். மேலும், கொண்ட நிலைப்பாட்டை நிறுவ நான் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றாலும் என் செயலில் பின் உள்ள காரணத்தில் ஒரு பெண் ஏன் எனக்குப் பயன்பட வேண்டும் ? அம்மா உனக்கு ஏதாவது புரிந்தால் சொல்லுங்கள் என்றார் சங்கரர்.

"எனக்கு ஒண்ணும் புரியயையே சங்கரா" என்றாள் ஆர்யாம்பிகை.

சங்கரர் இறைவனைப் பிரார்தித்துச் தியானித்த நிலையில் கண்மூடிச் சில நிமிடங்கள் அப்படியே இருந்தார்.

ஆர்யாம்பிகையின் உடல் விட்டு உயிர் பிரிந்தது.தாயின் தலையைச் சங்கரரின் கண்ணீர் நனைத்தது.

சங்கரர் பின் சுதாரித்துத் தான் கொள்ளியிட்டுக் காரியம் செய்யப்போவதாக சொன்னபோது, உற்றார், உறவினர் மற்றும் பண்டிதர்கள் கடுமையாக அவரது நிலைப்பாட்டை ஆட்சேபித்தனர்.

அவர்களின் கேள்வி துறவிக்கு உறவு ஏது ?

சங்கரர் அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது, தம் அன்னையைத் தம் தோளில் தூக்கிச் சென்று வீட்டுக்குப் பின் அருகில் உள்ள கொல்லையில் கிடத்தினார்.
சற்று நேரம் தன் தாயின் உடலையே பார்த்தபடி இருந்துவிட்டு, பின் கம்பீரமாக வான் நோக்கிப் பேசத் துவங்கினார்.

அக்னி பகவானே! இது நாள் வரை நான் இல்லற தர்மம் ஏற்றவனாக உனக்கு நெய்யையும், அவிஸ்ஸையும் ஆஹுதியாக அளித்தது இல்லை. ஆனால் இன்று என் தாயின் உடலை உனக்கு அளிக்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக என்று சொல்லும்போதே, மின்னலென தாம் சம்சாரியாகவும் வாழ்ந்த காலம் மனதில் வெட்டியது.

அக்கணத்தில் குபீரென அக்னி சுழன்றபடி வானில் இருந்து இறங்கி ஆர்யாம்பிகையின் சிதையை வலம் வந்து அவளின் உடல் மேல் படர்ந்தது. ஆர்யாம்பிகையின் உடல் எதிலிருந்து வந்ததோ அதுவாகவே மாறிப்போனது.