நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Friday, April 28, 2006

நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 302

நம்புங்கள் நாளை நமதே!

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).


நண்பனே எழுந்துகொள்!
அன்பால் உலகை அணைத்துகொள்!
கனவுகள் காண் கவின்மிகு உலகை
கற்பனை செய்! - மற்றவனை
திட்டாமல் மன்னிக்க கற்றுகொள்!

அல்லாவை கும்பிடுவான் அவனை நேசி!-இல்லை
இயேசுவை கும்பிடுகிறானே அவனையும் நேசி -உனது
நேசிப்பின் கரம்விரிந்துகொண்டே போகட்டும்
கருணை பொங்கும்விழிகளால் பார் உனது
சகோதரனை அவனிடம் ஆயிரம்குறைகள் -இருந்தாலும்
அவன் சகோதரன் அல்லவா!

வார்த்தைகளால் அல்ல, வர்ணிப்பால் அல்ல
அன்பால்தான் முடியும்
வர்க்கபேதமற்ற சமுதாயம்!-எடுத்துகொள்
அன்பெனும் ஆயுதம்
ஆயிரம் அனுகுண்டுகள் வந்தாலும்
அழியாது நெஞ்சில் நிறைந்த
அன்பென்று சொல்! -உலகம்
சுற்றுவதுஏதோ விசையால் அல்ல -அன்பெனும்
பசையால் நண்பனே புரிந்துகொள்!

எல்லாம் நிறைந்த இனிய உலகில் -நீ
எதற்க்கு பிறக்க போகிறாய் !
குறைகள் நிறைந்த உலகம்தான் - உனது
குத்துசண்டை மைதானம் விழும்
குத்துகளை அன்பால் மாற்று!
பல்லக்கில் ஏற பலரும் விரும்புவர் -பல்லகை
தூக்க நீதானே இருக்கிறாய்! -உனது
தோளை கொடு துன்பத்தை துடை !

ஆயிரம் முறை நீ தவறி விழலாம்- மறுபடி
பல்லாயிரம் முறை நீ எழவேண்டும்!
எழுவதை எண்ணு!
விழுவதைஎண்ணாதே!
நாளை என்பது நம்பிக்கை
பெற்ற பிள்ளை
நம்பு நண்பனே நாளை உனதே!

Thursday, April 27, 2006

நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 201

ஆறு


குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கட்டுரை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்)


மனம் என்பது சக்தி. மனம் என்பது யோசிப்பதின் அடிப்படை மெய்ம்மை; மூலக்கோட்பாடு. மனம் என்பது சிந்தனைகளைத் தொடர்சியாக உருவாக்கும் ஒரு இயந்திரம். "யத் மதி தத் கதி" என்று சொல்லப்படுவது சிந்தனையைப் பொறுத்து மனிதன் மற்றும் அவன் வாழ்வு எனலாம். இந்த மனம் என்பது, லேசான நெருப்பில் வளையும் மூங்கில் கைத்தடியாக மாறி பயன்படுவதைப் போல எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுத்து பயன்படக்கூடியது. நீ வெறுமையானால் நான் உன்னை நிரப்புவேன் என்று யேசுபிரான் சொல்வதும் இதைத்தான். (Empty thyself, I will fill thee). இந்திரியச் சுகங்களுக்கு மனதை அடிமையாக்காதவனும், மனதாலும் கூட அடுத்தவருக்குக் கெட்டது ஏதும் எண்ணாதவனும் ஜீவன் முக்தன் என்று சொல்லப்படுவதுண்டு.

பழக்கத்திலுள்ள தியானமும், பழக்கத்திலுள்ள மெளனமும் ஆன்மீகப் பாதையில் நடைபயில தேவையான நடைமுறைகள். இவைகளை ஒரு வாழும் முறையாக ஆக்கிக்கொள்ள சஞ்சலமற்ற அமைதியான மனமே அடிப்படை. பேசிப்பழகிய மனிதருக்கு மெளனமாயிருத்தல் என்பது மரணமடைவதற்குச் சமம். அவ்விதம் இருக்கப் பழகினால் அவர் ஒரு கடுந்துறவியாக அறிப்படுவார். தியானிக்காதவர்கள் தம்முள் இருக்கும் ஆத்மாவை வேட்டையாடுபவர்கள் என்று ஈசா உபநிஷதம் சொல்கிறது.

உடலைக் கட்டுப்படுத்தினால் உள்ளம் தூமையடையும் என்னும் பதஞ்சலி யோகம் படிப்படியான வழிமுறைகளைச் சொல்கிறது. இதற்கு இயமம், நியமம் என்று இரண்டு விதிகள் முதலில். இவையில் இயமம் என்பது செய்யக்கூடாததை விளக்குவது. நியமம் என்பது செய்ய வேண்டுவதை விளக்குவது. கொலை என்பது செய்யக்கூடாதது. அன்பாயிருத்தல் என்பது செய்ய வேண்டியது. அடுத்த இரண்டு விதிகள் ஆசனம் மற்றும் பிராணாயாமம். இதனால் புலனடக்கத்தைப் பெற முடியும். மேலும், சமாதி நிலையைப் பழகுவதில் முதற்படி இந்த நிலை என்று சொல்லப்படுவதுண்டு. பிரத்யாகாரமும், தாரணையும் இடைப்பட்ட இரண்டு நிலைகள். சமாதி நிலை என்பது 'தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது' என்று ஒரு சித்தர் பாடல் உண்டு.

சிந்திப்பதால் தான் நான் இருக்கிறேன் என்பது டெஸ்கார்டஸின் புகழ் பெற்ற வாசகம். நாம் சிந்திப்பது எப்போது என்று பார்த்தால் நமக்குச் சவால்களாகப் பிரச்சினைகள் உருவாகும்போது மட்டுமே என்றும் சொல்லப்படுவதுண்டு.
அவ்விதம் சிந்திக்கையில் வெளிப்பார்வையின் சாராம்சம் உள்பார்வையாகவே இருக்கிறது. தன்னைச் சுற்றியுள்ள வெளியுலகத்தைத் தனது பார்வையினால் உள்வாங்குகிற மனிதன், உள்வாங்கும் முறையில் சக மனிதருடன் வேறுபடுகிறான். இந்த வேறுபாடு கவனம், நினைவு, சிந்தனைமுறை ஆகிய பலவற்றைப் பொறுத்து அமைகிறது.

உளவியல் ரீதியாக நாம் பார்க்கிறோம் என்பதை திருமூலர்,

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை

என்று அழகாகக் குறிப்பிடுகிறார். நாம் காணும் பொருளின் காட்சிக்கு இரண்டு நிலைகள் உள்ளன.ஒரு நிலை, பொருள் கண்வழிப் புகுந்து மனதால்பாதிக்கப்படுவதற்கு முன்னிருப்பது. மற்றொரு நிலை, மனம் செயல்பட்டபின் தோன்றும் நிலை. இது இமானுவேல் கான்ட் ஒப்புக்கொண்ட ஒரு தத்துவம்.

கண்ணில் தெரியும் வடிவத்தின் தொடர்பான ஒரு சிந்தனையோட்டம் பார்த்தல் என்ற செயல்பாட்டுடன் அமைந்துவிடுகிறது. மனம் என்பது அந்த வடிவத்தைப் பதிய வைக்கின்றது. சுருக்கமாக மனிதனுக்கு வெளியே இருக்கும் யதார்த்தம், அவனுக்கு உள்ளே இருக்கும் உலகத்தின் கட்டளைக்கு ஏற்ப அறியப்படுகிறது. இந்த உள்லுலகம் ஒருவன் சார்ந்திருக்கும் சமூகம், பண்பாடு ஆகியவற்றைப் பொறுத்துக் காணப்படுகிறது. முக்கியமாக சூழ்நிலை என்பது பெரும்பங்கு வகிக்கிறது. சூழ்நிலை என்பது ஒரு சமூகத்தின் ஒருமித்தப் பார்வை. இந்தப்பார்வை சக மனிதரோடு பழகும்போது மேலும் பண்படுகிறது அல்லது விரிவடைகிறது முக்கியமாக கற்றுகொள்ளுதல் என்பது நிகழ்கிறது. மேலும், இந்தக் கற்றுக்கொள்ளுதல் என்பது சூழ்நிலைக்கேற்பத் தன்னைத் தயார் செய்துகொள்ள உதவி செய்கிறது.

ஒரு விஷயத்தைப் பற்றிய அறிவை அடைய தத்துவ சாஸ்திரத்தில் பிராமாணங்கள் என்பன பயன்படுகின்றன. அறிவு எனச் சொல்லும்போது ஒன்றைப் பற்றி நாம் பெற்ற அரிவு உண்மையானதா என்பது அந்த அறிவை நாம் எந்த வழியில் பெற்றோம் என்பதைப் பொறுத்தது. அறிவை விட அறிவைப் பெறும் வழி மிக மிக முக்கியமானது. இதற்கு தர்க்கரீதியாகவும் செல்ல முடியும். இந்தத் தத்துவத்தை நியாய சூத்திரம் என்ற நூல் கெளதமாரல் இயற்றப்பட்டது அழகாக விளக்குகிறது. கெளதமருடைய நியாய சூத்திரத்துக்கு வாத்ஸ்யாயனரும் விளக்கம் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுவதுண்டு. இவர் ஆண்-பெண் உறவு பற்றிய நூலை எழுதியவர்.

பிரமாணங்கள் ஆறு. அவை பிரத்யட்சம், யூகம், ஆப்தவாக்கியம், உபமானம், அருத்தாபத்தி, அனுபலப்தி எனப்படும்.

1. பிரத்யட்சம் என்பது ஐம்புலன்களால் உணரும் ஒரு ஆதாரம். நெருப்புச் சுவாலை இதற்கு உதாரணம்.

2. யூகம் என்பது ஒன்றைக்கொண்டு மற்றதை யூகித்து உணர்வது. நெருப்பில்லாமல் புகையாது என்னும் பழமொழி இதற்கு உதாரணம்.

3. ஆப்தவாக்கியம் என்பது அனுபவசாலியின் சொற்களைக்கொண்டு, ஆதாரமாகக்கொண்டு அறிவது. அந்தப் பக்கம் தெரியும் நெருப்பு காட்டில் ஆதிவாசி மக்கள் கொளுத்துவதால் தெரிவது என ஒருவர் சொல்ல அறிவது இதற்கு உதாரணம்.

4. உபமானம் என்பது ஒரு பொருளைக்கண்டவுடன் தாமாகவே அதுபோல உள்ள வேறு ஒரு பொருளின் சாயலில் இனம் காண்பது. இந்தப் பெண் ஜோதிகா என்ற நடிகையைப் போல இருக்கிறாளே ? என்று எண்ணும் எண்ணம் இதற்கு உதாரணம்.

5.அருத்தாபத்தி என்பது காட்டும் வழி சற்று சிக்கலானது. மற்ற மேற்சொன்ன வழிகளில் கிடைக்காத புது அறிவைக் கொடுப்பதுதான் இந்த வழி. இதற்கு உதாரணமாக, ஒருவன் உடல் பருத்திருக்கிறான். அவன் பகலில் உண்பதேயில்லை. அவன் உடல் பருத்தது எப்படி? எனக் கேட்டால் அவன் இரவில் உண்கிறான் என்று பதில் வரும். இந்த பதிலில் இரவில் உண்கிறான் என்ற அறிவு எப்படி வந்தது ? அந்த அறிவு தான் அருத்தாபத்தி.
யோசித்துப்பார்த்தால், மேற்சொன்ன மூன்றும் கூட லேசாக இந்த உதாரணத்தில் சாயல் காட்டும் ஆனால், அவை இதற்குப் பொறுந்தா.

6. அனுபலப்தி என்பது இன்மையை அறியும் அறிவு. இல்லாததை இருப்பதைப்போல அறிவது. சற்று முன் புறப்பட்ட இரயிலை இப்போது பார் என்று சொன்னால், இரயில் இல்லையே, புறப்பட்டுப் போய்விட்டதே என்று பதில் வரும். இப்பதில் இருப்பதைக் கண்டேன் என்று சொல்வதைப்போல இல்லாததைக் கண்டேன் என்று சொல்வதற்கு ஒப்பானது. காணாததைக் கண்டேன் என்று சொல்வதைப் போல.

இந்தப் பிரமாணங்கள் எங்கும் பயன்படக்கூடியவை. இவற்றைப் பயன்படுத்தி மனமானது வேண்டிய உருவை அடைகிறது. தண்ணீர் தான் இருக்கும் பாத்திரத்தின் அளவையும், உருவையும் பெறுவது மாதிரிதான்.
வாழ்வெனும் மகாநதியான ஆற்றில் நீந்திச் செல்ல உதவும் இந்த ஆறும் மனப்பயிற்சிக்கு உதவுபவை. வாழ்வைக் காப்பது விவேகமான மனம். எப்பொருளிலும் காரியம் யாது காரணம் யாது என்று பார்த்து நடந்தால் கோர்வை பிறழாமல் வாழ்வு நடக்கும்.

Monday, April 24, 2006

நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 301

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நாம்

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்)



கண்முன் உலகம் விரியும்
உள்ளங்கையில் உள்ளது கணினி-ஆனால்
கணினிகள் காட்டும் உலகம் கணினி
காட்டுமோ மனித இதயம்

சந்திரனை தொடலாம் - நாளை
செவ்வாயில் வசிக்கலாம் ஒளியின்
வேகத்தை மிஞ்சலாம்விதையின்
பாகத்தை மாற்றலாம் – ஆனால்
கணினிகள் காட்டும் உலகம் கணினி
காட்டுமோ மனித இதயம்

கண்டம் விட்டு கண்டத்தை ஏவு
கணைகளால் தொடலாம் உடல்
பிண்டத்துடன் பறக்கலாம் விண்ணில்-ஆனால்
கணினிகள் காட்டும் உலகம் கணினி
காட்டுமோ மனித இதயம்

மனிதன் வகுத்த நெறிகள் இங்கு
மனிதனை வாழ விடவில்லை இன்று
மனிதன் படைத்த கருவிகளால் -மனித
மனசை புரிய வழியில்லை -உலகில்
மனிதனை மனிதன் சுரண்டுவது
மடியும் காலம் வருமோ - மீள
வழிகள் காட்டி தருமோ!




* குறிப்பு

1. மனித வாழ்க்கையில் கம்ப்யூட்டர் போன்ற பல அறிவியல்
கருவிகள் வந்தபின்பும் மனிதநேயம் வளரவில்லை
அது வளர்ந்தால்தான் இந்த அறிவியல் முன்னேற்றத்தால் பலன் என்ற கருத்தை வலியுறுத்த இந்த கவிதைஎழுதப்பட்டது

Friday, April 21, 2006

நம்பிக்கை ஆண்டு விழா போட்டி - அறிவிப்பு

நம்பிக்கை குழுமத்தின் முதலாம் ஆண்டு விழா கதை , கவிதை மற்றும் கட்டுரை போட்டி அறிவிப்பு மடல் இணையத்தின் இனிய நண்பர்களே! வணக்கம்!

உங்கள் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது முதலாம் ஆண்டுவிழாவினை ஏப்ரல் 23, 2006 - ல் கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் புத்தகப் பரிசு வழங்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி:

1. இணையத் தமிழில் ஈடுபாடு உள்ளவர்கள் எவராகினும் இருக்கலாம்.

2. நம்பிக்கையின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.

3. வலைப்பூ நண்பர்கள் பெரிதும் வரவேற்கப் படுகின்றனர்.

போட்டி விதி முறைகள்:

1. படைப்பாளிகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் போது படைப்பின் தரம் குறைகிறது. அதனால் இது தான் தலைப்பு என்று தருவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. தலைப்பை படைப்பாளிகளே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஆனால் படைப்பைப் பிறர் படிக்கும் போது இப்படிக் கூட ஒரு பார்வை இருக்க முடியுமா என்று பிரமிக்க வைப்பதாக இருப்பது அவசியம்.

2. உங்கள் படைப்பு கவிதையாகவோ, கட்டுரையாகவோ, கதையாகவோ அல்லது இலக்கியங்களை நயம் படச் சொல்லும் ஆய்வாகவோ இருக்கலாம். மனிதனுக்கு நம்பிக்கையை விதைக்கும் (அ) சமூக பார்வை கொண்ட அல்லது தத்துவம் சார்ந்ததாய் இருத்தல் மிகச் சிறப்பு.

3. சாடலாக இருந்தாலும், தன் கருத்தை ஆணித்தரமாக கூறினாலும் அது நாகரீக எல்லையைத் தாண்டாதவாறு பார்த்துக் கொள்வது குழும நட்பிற்கு நல்லது.

4. கட்டுரையில், கவிதையில், கதையில் ஏதாவது முக்கிய விஷயங்களைக் கூறுகையில் ஆதாரம் இருந்தால், * புள்ளியிட்டு அதனை படைப்பின் முடிவில் தருதல் நலம்.

5. குறைந்த வார்த்தைக்குள் சிறப்பாக கருத்தை 'பளிச்'சென்று சொல்லும் படைப்பு சிறந்ததாகக் கருதப்படும்.

6. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!

7. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!

படைப்பை அனுப்ப கடைசி நாள்: 14 - 05 - 2006 (ஞாயிறு) இந்திய நேரம் இரவு 7.00 மணிக்குள்

தேர்வுக் குழு : படைப்பை தேர்ந்து எடுப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்ற மொழி வல்லுநர்கள், பேராசிரியர்கள், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீகச் செம்மல்கள். உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப் பட்டு தேர்ந்தெடுக்கப் படும்.

பெயரை மறைத்து கட்டுரை குழுமத்தில் பிரசுரமாகும். பிறரின் விமர்சனங்கள் கட்டுரையைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய அடிப்படையாகக் கொள்ளப்படும்.

தங்களது படைப்பைப் பற்றி உண்மையாகத் தெரிந்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

முதலாம் இடம், இரண்டாம் இடம் என்று வகைப்படுத்தப் போவதில்லை. கவிதை மற்றும் கட்டுரைகளில் இருந்து சிறந்த மூன்று, மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு பரிசளிக்கப் படும்.

ஆன்மிகம் சம்பந்தமாய் வரும் படைப்பிற்கு சிறப்பு பரிசாக பொற்காசு பரிசளிக்க இனிய ஆன்மீக நண்பர் ஆவல் கொண்டு உள்ளார்.

அனுப்பப்படும் படைப்புகளை நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம். தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் மே மாத இறுதியில் அறிவிக்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

1.பரஞ்சோதி paransothi@gmail.com
2.உமாநாத்(எ) விழியன் umanaths@gmail.com
3.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com

இந்த 3 மின்னஞ்சலுக்கும் அனுப்பி வையுங்கள். மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!

முக்கியக் குறிப்பு : தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் சும்மா பொழுது போக்கிற்காக அன்று , சில நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படவும் உள்ளது என்பதை நம்பிக்கை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.

உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி!

இவண்,
நம்பிக்கை நண்பர்கள்
கூகுள் குழுமம்.
http://groups-beta.google.com/group/nambikkai/